திருப்பூர் சாலை விபத்தில் 4 பேர் மரணம்! அமைச்சரை ஸ்பாட்டுக்கு அனுப்பி நிவாரணம் அறிவித்த ஸ்டாலின்!
திருப்பூர் அருகே சரக்கு வாகனம் கவிழ்ந்து பெரும் விபத்து.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ள நிலையில் அவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் அறிவித்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.
அதுமட்டுமின்றி சம்பவம் பற்றி கேள்விபட்டவுடன் அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதனை ஸ்பாட்டுக்கு அனுப்பி வைத்தார்.

இது தொடர்பாக முதல்வர் வெளியிட்ட அறிவிப்பின் விவரம் வருமாறு;
''திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே பயணிகளை ஏற்றிச் சென்றுகொண்டிருந்த சரக்கு வாகனம் எதிர்பாராத விதமாக கவிழ்ந்ததில் சரோஜா, பூங்கொடி, கிட்டுசாமி, மற்றும் தமிழரசி, ஆகியோர் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.
இச்சம்பவத்தைக் கேள்விப்பட்டவுடன், செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதனை உடனடியாக விபத்தில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து, ஆறுதல் கூறி அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்திட அனுப்பி வைத்துள்ளேன்.

மேலும், இவ்விபத்தில் படுகாயமடைந்து, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள பழனி, வளர்மதி,இந்துமதி, மற்றும் காயத்ரி,ஆகியோருக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க அறிவுறுத்தியுள்ளேன்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 இலட்சம் ரூபாயும், படுகாயமடைந்தவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.'' இவ்வாறு அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications