பல்லடம் கொலை கொள்ளை.. சிக்காத துப்பு.. 850 பேரின் விவரங்களை சேகரித்து தனிப்படை போலீசார் விசாரணை!
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, தமிழ்நாடு முழுவதும் கொலை செய்து கொள்ளையில் ஈடுபட்ட பழைய வழக்குகளில் தொடர்புடைய 850 பேரின் விவரங்களை சேகரித்து தனிப்படை போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த பொங்கலூர் அருகே உள்ள சேமலைகவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தெய்வசிகாமணி (78). இவரது மனைவி அலமாத்தாள் (வயது 75). இவர்கள் தங்கள் தோட்டத்து வீட்டில் தங்கி விவசாயம் செய்து வந்தனர். இவர்களது மகன் செந்தில்குமார் (46), கோவையில் ஐ.டி நிறுவனத்தில் பணி செய்து வந்தார். இவர் மனைவி, குழந்தைகளுடன் கோவையில் தங்கி இருந்தார்.

கடந்த நவம்பர் 28 ஆம் தேதி செந்தில்குமார், உறவினர் வீட்டு விசேஷத்தில் கலந்து கொள்வதற்காக சேமலைகவுண்டம்பாளையம் சென்று தனது பெற்றோர்களுடன் தங்கி இருந்தார். அன்று இரவு, இவர்கள் மூவரையும் மர்ம நபர்கள் கொடூரமாக வெட்டி கொலை செய்து உள்ளனர். மேலும் வீட்டில் இருந்த 8 பவுன் நகையையும் கொள்ளை அடித்துச் சென்றனர்.

மறுநாள் காலை அவர்கள் வீட்டிற்கு சென்ற சவரத் தொழிலாளி வல்பூரான், அங்கே மூன்று பேரும் தலையில் வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். அதில் வெட்டுப்பட்டு உயிருக்கு போராடி கிடந்த தெய்வசிகாமணி, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார். பல்லடத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த கொடூரக் கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த கொலை வழக்கு தொடர்பாக டிஐஜி சரவண சுந்தர் மேற்பார்வையில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தது. ஆனால் வழக்கில் பெரிய முன்னேற்றம் ஏற்படாததை அடுத்து, தனிப் படைகளின் எண்ணிக்கை 14 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது.
இந்த கொடூர கொலைக்கு கொள்ளை முயற்சி தான் காரணமா அல்லது வேறு ஏதும் பிரச்சனையா என தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். கொலையான 3 பேரின் குடும்பத்துக்குள் வேறு பிரச்சனை, முன் விரோதம் இல்லை என தெரிய வந்துள்ளது.

கடந்த 14 ஆண்டுகளில், அதாவது 2010க்கு பிறகு இதுபோல நடந்த கொலை வழக்குகள் கணக்கெடுக்கப்பட்டு விசாரிக்கப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் கொலை செய்து கொள்ளையில் ஈடுபட்ட பழைய வழக்குகளில் தொடர்புடைய 850 பேரின் விவரங்களை சேகரித்து தனிப்படை போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
காங்கேயம், பல்லடம், அவிநாசி பாளையம், தாராபுரம், திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். பல்லடம் கொலை கொள்ளை வழக்கு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த வழக்கில் தற்போது 14 தனிப்படைகளாக அதிகரித்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications