மண்ணை அள்ளிப் போட்ட டிரம்ப்! திருப்பூரில் 10 லட்சம் பேர் பாதிப்பு! நெருக்கடியில் ஏற்றுமதியாளர்கள்!
திருப்பூர்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரி விதிப்பை இன்று முதல் அமல்படுத்தியுள்ளார். இதனால் திருப்பூரில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் என்கின்றனர் உற்பத்தியாளர்கள். உள்நாட்டு ஏற்றுமதிக்கு எந்த பிரச்சினையும் இல்லை எனவும், அதே நேரத்தில் வெளிநாட்டு ஏற்றுமதியை நம்பி இருக்கும் 10 லட்சம் தொழிலாளர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கப்படுவார்கள் என்கிறார் உற்பத்தியாளர் முத்துராஜ்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நட்பு நாடான இந்தியாவுக்கு எதிராக வர்த்தகப் போரை துவக்கி இருப்பது இந்தியா முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தோல் பொருட்கள், இயந்திரங்கள், ஆயத்த ஆடைகள் அதிகளவு அமெரிக்காவுக்கு உற்பத்தி செய்யப்படும் நிலையில் பல நகரங்கள் நெருக்கடிக்குள்ளாகியுள்ளது.
குறிப்பாக தமிழகத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, ஆம்பூர் உள்ளிட்ட மண்டலங்கள் கடும் நெருக்கடியை சந்தித்துள்ளன. அதிகபட்சமாக 'டாலர் சிட்டி' என அழைக்கப்படும் திருப்பூரில் 10 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் உள்ளதாக கூறுகிறார்கள் உற்பத்தியாளர்கள்.

டிரம்ப் வரி
இது தொடர்பாக ஒன்இந்தியா தமிழுடன் பேசிய உற்பத்தியாளர் முத்துராஜ்," அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 50 சதவீத வரியை விதித்துள்ள நிலையில் உள்நாட்டு உற்பத்தியை பொறுத்தவரை எந்த பாதிப்பும் இல்லை. பண்டிகை காலம் நெருங்கும் நிலையில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களுக்கு திருப்பூரிலிருந்து ஆடைகளை ஏற்றுமதி செய்ய ஆர்டர்கள் நிறைய இருக்கிறது. அதே நேரத்தில் அமெரிக்காவில் குளிர்காலத்தை குறிவைத்து ஆர்டர் எடுத்திருந்த ஏற்றுமதியாளர்கள் கடும் நெருக்கடியை சந்தித்து இருக்கின்றனர்.

திருப்பூர் நெருக்கடி
ஏற்கனவே ஆர்டர் கொடுத்தவர்கள் தற்போதைக்கு அந்த ஆர்டர்களை நிறுத்தி வைக்குமாறு கூறியுள்ளனர். டாலர் மதிப்பு அதிகரிப்பால் ஏற்கனவே பெற்ற ஆர்டர்களை ஏற்றுமதி செய்வதிலும் சிக்கல் இருக்கிறது. இன்று முதல் வரி விதிப்பு அமலுக்கு வந்திருக்கும் நிலையில் நம்மூர் மதில்லில் அமெரிக்காவில் 100 ரூபாய்க்கு விற்கப்பட வேண்டிய ஆடைகள் 130 முதல் 150 ரூபாய் வரை விற்க வேண்டிய நிலை இருக்கிறது. இதனால் வாங்கும் வாடிக்கையாளர்கள் அதனை தவிர்ப்பார்கள்.
ஆடை தொழில்
அதே நேரத்தில் வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஆடுகளின் விற்பனை அதிகரிக்க வாய்ப்புள்ளது. அமெரிக்க ஆர்டர்கள் குறைவு மற்றும் ரத்து செய்யப்பட்டதால் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் கடும் நெருக்கடியை சந்தித்துள்ளனர். இதனால் கட்டிங், டெய்லர், பேக்கிங் உள்ளிட்ட தொழிலில் ஈடுபட்டிருக்கும் 5 லட்சம் பேர் நேரடியாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அது மட்டும் அல்லாமல் சாயம் இடுதல், சுமை தூக்குதல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டிருக்கும் மறைமுக தொழிலாளர்களும் 5 லட்சம் பேர் கடும் நெருக்கடியில் சிக்கி உள்ளனர்.
வேலை இழப்பு
அமெரிக்காவின் வரிவிதிப்பு நடவடிக்கையால் 10 லட்சம் பேரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருக்கிறது. பல ஏற்றுமதி நிறுவனங்கள் ஊழியர்களுக்கு சம்பளம் கூட தர முடியாமல் தவிக்கின்றன. ஏற்கனவே ஏராளமான ஆர்டர்கள் வங்கதேசத்திற்கு சென்றதால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் கடும் சிக்கலை சந்தித்தனர். தற்போது அது ஓரளவு குறைந்திருக்கிறது. அதே நேரத்தில் அமெரிக்காவில் வரிவிதிப்பு நடவடிக்கை மீண்டும் அதே போன்ற ஒரு பாதிப்பை தான் ஏற்படுத்தும். எனவே மத்திய மாநில அரசுகள் ஒருங்கிணைந்து வரிவிதிப்பு நடவடிக்கையை ரத்து செய்ய பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்" என்றார்.












Click it and Unblock the Notifications