ஏன் தகுதியானவர்களே இல்லையா? குடும்பத்தின் அழுத்தத்தால்தான் மகனுக்கு அமைச்சர் பதவி! டிடிவி தினகரன்
திருப்பூர்: குடும்பத்தினரின் அழுத்தம் காரணமாகவே மகனை அமைச்சராக்கியுள்ளார் முதல்வர் ஸ்டாலின் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.
தமிழகத்தின் 35 ஆவது அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் இன்றைய தினம் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தனது அறையில் அமர்ந்து முதல் 3 கோப்புகளில் உதயநிதி கையெழுத்திட்டார். அவரை மூத்த அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, பொன்முடி உள்ளிட்டோர் வாழ்த்தினர். பதவிப்பிரமாணம் செய்து கொண்ட உதயநிதி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

வாரிசு அரசியல்
அப்போது அவர் கூறுகையில் வாரிசு அரசியல் என பேசிக் கொண்டுதான் இருப்பார்கள். அவர்களுக்கு எனது செயல்பாடுகள் மூலம் பதிலடி கொடுப்பேன். தமிழகத்தை விளையாட்டு தலைநகராக மாற்றுவேன். அனைத்து தொகுதிகளிலும் ஸ்டேடியம் அமைக்கப்படும். விளையாட்டுத் துறை சார்பாக தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்றார்.

திருப்பூரில் பேசிய தினகரன்
இந்த நிலையில் திருப்பூரில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியிருப்பதாவது: திமுகவில் அமைச்சராக தகுதியானவர்களே இல்லையா? உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் என குடும்பத்தினரின் அழுத்தம் காரணமாகவே மகனை முதல்வர் ஸ்டாலின் அமைச்சராக்கியுள்ளார் என கடுமையாக விமர்சித்துள்ளார்.

டிடிவி தினகரன்
அது போல் நேற்றைய தினம் தஞ்சாவூரில் பேசிய டிடிவி தினகரன், திமுகவில் எம்எல்ஏவாக உள்ள உதயநிதி ஸ்டாலின் அமைச்சராவது தவறில்லை. ஆனால் அவரை அமைச்சராக்குவதில் முதல்வர் ஸ்டாலின் ஏன் இவ்வளவு அவசரம் காட்டுகிறார் என காரணம் தெரியவில்லை. இதில் ஏதோ அவசரம் தெரிகிறது என விமர்சித்திருந்தார்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி
முன்னாள் முதல்வர் கருணாநிதி காலத்தில் கூட ஸ்டாலின், மேயராக இருந்து சிங்கார சென்னை திட்டம், மேம்பாலம் கட்டும் திட்டம் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தினார். தன்னை நிர்வாக ரீதியில் நிரூபித்த காரணத்தால் அவருக்கு அடுத்தடுத்த பதவிகளை கருணாநிதி கொடுத்தார். ஆனால் உதயநிதி அப்படி இதுவரை எதையும் செய்யவில்லை என்பதே எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டாக உள்ளது.

எய்ம்ஸ் செங்கல்
அதாவது 2019ஆம் ஆண்டு எய்ம்ஸ் செங்கல்லை வைத்து அவர் செய்த பிரச்சாரம் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றிக்கு உதவியது. அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. இதற்குத்தான் திமுக இளைஞரணி செயலாளர் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டது. ஆனால் எம்எல்ஏவாகி இரண்டு ஆண்டுகளே ஆன நிலையில் திடீரென அமைச்சர் பதவியை கொடுத்திருப்பது கடும் விமர்சனத்திற்குள்ளானது.












Click it and Unblock the Notifications