திருப்பூரில் 30 லட்சம் பேர் வேலையிழக்கும் அபாயம்.. டிரம்பின் வரி விதிப்பால் வந்த சிக்கல்.. ஷாக்
திருப்பூர்: இந்தியா மீதான அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வரி விதிப்பால் நம் நாட்டின் பின்னலாடை உற்பத்தியில் முக்கிய பங்காற்றி வரும் திருப்பூரில் 30 லட்சம் பேர் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. திருப்பூரில் இருந்து அதிகளவில் அமெரிக்காவுக்கு பின்னலாடை ஏற்றுமதியாகி வரும் சூழலில் 20 ஆயிரம் தொழில் யூனிட்கள் பாதிப்பை எதிர்கொள்ள உள்ளதாக திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம் நாட்டுக்கு 50 சதவீத வரிகளை விதித்துள்ளார். முதற்கட்டமாக கடந்த 7 ம் தேதி 25 சதவீத வரி அமலுக்கு வந்தது. அடுத்த கட்டமாக வரும் 27 ம் தேதி 25 சதவீத வரி செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இதனால் இந்தியா - அமெரிக்கா உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அமெரிக்காவின் வரி விதிப்பால் அந்த நாட்டுக்கு நம் நாட்டில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் அளவு குறையும் அபாயம் உள்ளது. மேலும் உள்நாட்டில் உற்பத்தி குறைந்து பலரும் வேலையிழக்கும் அபாயம் ஏற்படும் சூழல் உருவாகலாம்.
30 லட்சம் பேர் வேலையிழக்கும் அபாயம்
இதற்கிடையே தான் டிரம்பின் வரி விதிப்பால் திருப்பூர் பெரிய அளவில் பாதிக்கப்படும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. அதாவது இந்தியாவின் பின்னலாடை ஏற்றுமதியில் முக்கிய இடம் திருப்பூருக்கு உள்ளது. நம் நாட்டில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பின்னலாடையில் 68 சதவீதம் திருப்பூரில் இருந்து தான் செல்கிறது.
டிரம்பின் வரி விதிப்பால் திருப்பூரில் பின்னலாடை துறை பெரும் பாதிப்பை சந்திக்கும் அபாயம் உள்ளது. சுமார் 20,000 தொழிற்சாலைகள் பாதிக்கப்படுவதோடு, ஏறக்குறைய 30 லட்சம் பேர் வேலையிழக்கும் அச்சம் ஏற்பட்டுள்ளது. இதுபற்றி திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தின் இணை செயலாளர் குமார் துரைச்சாமி அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:
20 சதவீதம் அதிகரித்த ஏற்றுமதி
‛‛கடந்த ஆண்டு நாங்கள் ரூ.44,744 கோடி வருவாய் ஈட்டினோம். கொரோனா ஊரடங்கு, மேற்கத்திய நாடுகளின் பொருளாதார மந்த நிலை, ரஷ்யா - உக்ரைன் போருக்கு மத்தியில் இந்த சாதனையை செய்தோம். இந்த பிரச்சனைகளுக்கு நடுவே எங்களுக்கு 20 சதவீத வளர்ச்சி கிடைத்தது.
திருப்பூரில் இருந்து அமெரிக்கா, பிரிட்டன் உள்பட ஐரோப்பிய நாடுகள், ஆஸ்திரேலியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
அமெரிக்காவுக்கு தான் அதிகம்
இதில் அமெரிக்காவுக்கு தான் அதிக ஏற்றுமதி செல்கிறது. திருப்பூரில் இருந்து செல்லும் ஏற்றுமதியில் அமெரிக்காவுக்கு 40 சதவீதம், பிரிட்டனுக்கு 10 சதவீதம், பிற ஐரோப்பிய நாடுகளுக்கு 40 சதவீதம், மற்ற நாடுகளுக்கு 10 சதவீதம் வரை ஏற்றுமதி செய்யப்படுகிறது. டிரம்பின் வரி விதிப்பு அமெரிக்காவை மட்டுமே நம்பி இருக்கும் ஏற்றுமதியாளர்களை நெருக்கடியில் தள்ளி உள்ளது.
குறிப்பாக உள்ளாடைகள், குழந்தைகளுக்கான உடைகள், நைட் நேரத்தில் அணியும் உடைகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் சிக்கலில் உள்ளன. இப்போது 25 சதவீத வரி அமலுக்கு வந்துள்ளது. இது பெரிய அடியை தந்துள்ளது. இந்த வரி விதிப்பு புதிய ஆர்டர்களை வராமல் தடுத்து நிறுத்தி உள்ளது. அதுமட்டுமின்றி வரும் 27 ம் தேதி அடுத்தக்கட்டமாக 25 சதவீத வரி விதிக்கப்படுவதாக கூறி உள்ளார். இதனால் ஆகஸ்ட் 27 க்கு பிறகு ஆர்டர்களை அனுப்ப வேண்டாம் என்று பலரும் தெரிவித்துள்ளனர்'' என்று கஷ்டத்தை பகிர்ந்துள்ளார்.
30 லட்சம் பேருக்கு அபாயம் - ஸ்டாலின்
இதற்கிடையே தான் நேற்று முதல்வர் ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினார். அதில், ‛‛அமெரிக்க சந்தையை தமிழ்நாடு அதிகமாக சார்ந்திருப்பதால் இறக்குமதி வரியின் தாக்கம் இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் அதிகமாக இருக்கும். தமிழ்நாட்டில் ஜவுளித்துறை கிட்டத்தட்ட 75 லட்சம் பேர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்துள்ளது.
25 சதவீத வரி மற்றும் முன்மொழியப்பட்டுள்ள 50 சதவீத வரியின்காரணமாக 20 லட்சம் பேர் வேலையிழக்கும் அபாயம் உள்ளது. இந்த நெருக்கடியை தணிக்க நமது ஏற்றுமதி போட்டிதன்மைக்கு நீண்டகாலமாக தடையாக இருக்கும் கட்டமைப்பு சிக்கல்களை தீர்ப்பது அவசியம்'' என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications