ஒருநாள் ஒருபொழுதாவது எனக்கு விடியும்.. அப்போ பாருங்க.. திருப்பூர் திருப்புமுனை மாநாட்டில் விஜயகாந்த்
Recommended Video
திருப்பூர்: ஒருநாள் ஒரு பொழுதாவது எனக்கு விடியும் என திருப்பூர் மாநாட்டில் விஜயகாந்த் நம்பிக்கை தெரிவித்தார்.
2005-ஆம் ஆண்டு தேமுதிகவை தொடங்கிய நாள் முதல் விஜயகாந்த் ஏராளமான பொதுக் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், கண்டன கூட்டங்களில் பேசி வந்தார்.
2006-ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் அவர் பேசிய பேச்சுகள் மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. அப்போது விஜயகாந்த் மட்டுமே வெற்றி பெற்று எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டாலும் அக்கட்சி பெற்ற வாக்குகள் ஏராளமாக இருந்தது.

தேர்தல்கள்
இதையடுத்து கடந்த 2011-ஆம் ஆண்டு சட்டப்சபை தேர்தல், 2014-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல், 2016-ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் என தனது பேச்சுகளால் மக்களை தன் பக்கம் இழுத்தார். 2014, 2016 தேர்தல்களில் ஒரு தொகுதியிலும் தேமுதிக வெற்றி பெறாவிட்டாலும் விஜயகாந்துக்கென நல்ல பெயர் இன்று வரை உள்ளது.

பேசவில்லை
இதன் பிறகு விஜயகாந்துக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவர் அமெரிக்காவில் சிகிச்சைக்கு அவ்வப்போது சென்றுவிட்டார். மேலும் தைராய்டு பிரச்சினை காரணமாக அவரால் சரிவர பேச இயலவில்லை. எனினும் ரசிகர்கள், தொண்டர்கள், மக்கள் நலன் கருதி தன்னால் இயன்றதை பேசி வரும் விஜயகாந்தின் பொதுநலத்தை பாராட்ட வார்த்தைகள் இல்லை.

விஜயகாந்த்
கூட்டணி விவகாரத்தில் தேமுதிக எடுத்த முடிவுகளில் தவறு இருந்தாலும் ஜெயலலிதாவையே எதிர்த்தவர் என்ற பெயரை பெற்று விட்டதால் இதை விட வேறு என்ன வேண்டும் என அவரது நலம்விரும்பிகள் கருதுகின்றனர். இந்த நிலையில் கடந்த 2019-ஆம் ஆண்டு தேர்தலின்போதும் விஜயகாந்த் கடைசி நாளில் தேர்தல் பிரசாரத்துக்கு வந்தார்.

ஆர்வாரம்
அப்போது அவர் ஓரிரு வார்த்தைகளை பேசிவிட்டு சென்றார். மக்களிடம் பேச வேண்டும் என மனம் இருந்தாலும் அவரது உடல்நிலை ஒத்துழைக்கவில்லை. இந்த நிலையில் திருப்பூரில் தேமுதிக முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் நீண்ட நாட்களுக்கு பிறகு விஜயகாந்த் கலந்து கொண்டதால் தொண்டர்கள் ஆரவாரத்தில் உள்ளனர்.

மைதானம்
திருப்பூரில் அந்த மாவட்ட தேமுதிக சார்பில் விஜயகாந்த் பிறந்தநாள் விழா, கட்சியின் 15-ஆம் ஆண்டு தொடக்க விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று மாலை திருப்பூர்- காங்கேயம் சாலையில் உள்ள ஓட்டல் மைதானத்தில் நடைபெற்றது. இதில் விஜயகாந்த் கலந்து கொண்டார்.

உற்சாகம்
அப்போது விஜயகாந்த் பேசுகையில் ஒரு நாள் ஒரு பொழுதாவது விஜயகாந்துக்கு விடியும். அப்போது நான் மக்களை தங்க தொட்டிலில் வைத்து தாலாட்டுவேன். அடுத்த பொதுக் கூட்டத்தில் ஒரு மணி நேரம் பேசுவேன் என்றார். விஜயகாந்த் பேச தொடங்கும் போதே தொண்டர்கள் நீண்ட நேரம் கரகோஷம் எழுப்பி அவரை உற்சாகப்படுத்தினர்.












Click it and Unblock the Notifications