திருப்பூர் முதியவரின் பக்கத்தில் பாருங்க . இதன் மதிப்பே பல கோடி ரூபாய்.. சிக்கிய 'கடல் தங்கம்'.
திருப்பூர்: பையில் இருக்கும் இது பார்க்க சாதாரணமான பொருள் அல்ல.. இதன் மதிப்பு பல கோடியாகும்.. உலகின் பல நாடுகளில் பெரிதும் விருப்படும் திமிங்கல உமிழ்நீர் கட்டிகள் ஆகும். திருப்பூர் மாவட்டம் கணபதிபாளையம் பகுதியில் பல கோடி மதிப்புள்ள திமிங்கல உமிழ்நீர் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. இவற்றை கடத்தி பதுங்கி வைத்திருந்த முதியவரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
உலகம் முழுவதும் கடல் பகுதிகளில் வாழும் எண்ணெய்த் திமிங்கிலங்கள் வெளியிடும் உமிழ்நீருக்கு மதிப்பு மிக அதிகம் அதன் செரிமாண உறுப்பிலிருந்து வாய் வழியாக வெளியேற்றும் திடக்கழிவுப் பொருள் திமிங்கல வாந்தி அல்லது அம்பர்கிரிஸ் (Ambergris) என்று அழைக்கப்படுகிறது. இது வெள்ளை, சாம்பல் மற்றும் கருப்பு நிறங்கள் கலந்து இருக்கும். இந்த எண்ணைத் திமிங்கிலங்கள் கடலில் வாழும் பீலிக் கணவாய் போன்ற உயிரினங்களை வேட்டையாடி உண்பது வழக்கம். அந்த பீலிக் கணவாயின் ஓட்டை இத் திமிங்கலங்களின் செரிமான அமைப்பால் செரிக்கவைக்க முடியாது

எனவே அந்த ஓடுகள் திமிங்கிலத்தின் குடலில் சிக்கிக் கொள்ளும். இந்த ஓட்டினால் திமிங்கிலத்தின் உள் உறுப்புகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க இந்த ஓட்டை சுற்றிய செரிமான அமைப்பிலிருந்து ஒரு சிறப்பு வகை திரவம் உற்பத்தியாகும். இதுதான் திமிங்கல வாந்தி என்று அழைக்கப்படுகிறது. அதாவது ஆங்கிலத்தில் அம்பர் கிரீஸ் என்று அழைப்பார்கள்.
திமிங்கல வாந்தி உலகம் முழுவதும் நறுமணப் பொருட்கள் மற்றும் பாலியியல் மருந்துகள் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. இது எப்படி உலகிற்கு வரும் என்றால், எண்ணெய்த் திமிங்கிலங்கள் வாந்தியெடுப்பதன் மூலம், வெளியேற்றி வருகிறது. சில எண்ணெய்த் திமிங்கலங்கள், மலப்புழை வழியாகவும் அம்பர் கிரீஸை வெளியேற்றுகின்றன. திமிங்கல வாந்தி எனும் அம்பர்கிரிஸ் எத்தனை பழையதோ, எத்தனை பெரியதோ அதற்கு ஏற்றார் போல் அதிக விலை தரப்படுகிறது. கோடிகளில் இதன் மதிப்பு இருக்கிறது.
சீனாவில் பாலியல் திரவ மருந்து தயாரிக்கவும், அரபு நாடுகளில் இது உயர் தரமான வாசனை திரவியங்களை தயாரிக்கவும் பயன்படுகிறது. பொதுவாகவே திமிங்கல வாந்தியிலிருந்து (அம்பெர்கிரிஸ்) மூளை, உடல், நரம்பு மற்றும் பாலுறவு பிரச்சனைகளுக்கு பல்வேறு மூலிகைகளுடன் பயன்படுத்தப்படுகிறது. திமிங்கல வாந்தியிலிருந்து தயாரிக்கப்படும் ஹப்பே நிஷாத் எனும் மருந்து விந்தணுக்கள் எண்ணிக்கையை பெருக்கவும் மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருந்தாகப் பயன்படுவதாக சொல்கிறார்கள்.
திமிங்கல வாந்தியான அம்பெர்கிரிஸ் கிடைப்பது மிகவும் அரிதானது. இந்நிலையில் அரபு நாடுகளில் திமிங்கல வாந்தி எனும் அம்பரிசுக்கு பெரும் தேவை இருப்பதால் அதனை கோடிகளை கொட்டி வாங்க ரெடியாக இருக்கிறார்கள். இதனை பலர் 'கடல் தங்கம்' அல்லது 'மிதக்கும் தங்கம்' என்றும் அழைக்கிறார்கள்.. பன்னாட்டுச் சந்தையில் இதன் விலை கிலோ ஒன்றுக்கு 1.5 கோடி ரூபாய் வரை இருக்கிறது. இதன் காரணமாக எண்ணெய்த் திமிங்கலத்தின் எலும்புகள், எண்ணெய் மற்றும் வாந்தி ஆகியவற்றுக்காக அதிகம் வேட்டையாடப்படுகிறது. இதன் காரணமாக திமிங்கல வாந்தி ஏற்றுமதிக்கு இந்தியாவில் மிகவும் கடும் கட்டப்பாடுகள் உள்ளன. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இந்நிலையில் திருப்பூர் அருகே பல கோடி ரூபாய் மதிப்புள்ள திமிங்கலத்தின் உமிழ்நீர் கட்டியை பதுக்கி வைத்திருந்த வெல்டிங் பட்டறை உரிமையாளரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்து உமிழ்நீர் கட்டியை பறிமுதல் செய்துள்ளார்கள். திருப்பூர் கணபதிபாளையம் பகுதியில் திமிங்கலத்தின் உமிழ்நீர் கட்டியை பதுக்கி வைத்து விற்பனை செய்ய இருப்பதாக திருப்பூர் வனச்சரக அதிகாரி (பொறுப்பு) நடராஜூக்கு ரகசிய தகவல் வந்தது.
இதையடுத்து திருப்பூர் மாவட்ட வனச்சரக அதிகாரி உத்தரவின் பேரில், அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்பகுதியில் வெல்டிங் பட்டறை நடத்தி வரும் 52 வயதாகும் ராஜேந்திரன் என்பவர் திமிங்கல உமிழ்நீர் கட்டியை பட்டறையில் பதுக்கி வைத்திருந்ததும் கண்டறியப்பட்டது. 6.5 கிலோ எடையுள்ள திமிங்கலத்தின் உமிழ்நீர் கட்டியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு பல கோடி ரூபாய் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்
திமிங்கலத்தின் உமிழ்நீர் கட்டியை தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த நண்பர் ஒருவர் மூலம் தூத்துக்குடியில் இருந்து வாங்கி வைத்திருந்ததாகவும், உமிழ்நீர் கட்டியை விற்பனை செய்து கொடுத்தால் அதற்குரிய கமிஷன் கொடுப்பதாக கூறியதாகவும், ஆனால் அதை விற்பனை செய்ய முயன்றபோது சிக்கியதாக ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். பின்னர் ராஜேந்திரனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
திமிங்கலத்தின் உமிழ்நீரை பயன்படுத்தி வாசனை திரவியங்கள், மருந்து பொருட்கள் தயாரிக்கப்படுவதாகவும், அரிதான பொருள் என்பதால் அதிக விலை கொடுத்து வாங்குவதாகவும் தெரிவித்தனர். திருப்பூரில் திமிங்கலத்தின் உமிழ்நீர் கட்டியை முதல்முறையாக வனத்துறையினர் பறிமுதல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications