ஒரு வருடத்திலேயே திமுக எதையும் செய்யவில்லைனு போராடுறீங்க.. 8 வருஷமா பாஜக என்ன செய்தது? சீமான் கேள்வி
திருப்பூர்: கடந்த ஓராண்டில் திமுக எதையும் செய்யவில்லை என்று சொல்லும் பாஜக, கடந்த 8 ஆண்டுகளில் என்ன செய்துள்ளது என்பதை விளக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
Recommended Video
பாஜக அரசு மத்தியில் ஆட்சியமைத்து 8 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, பாஜக சார்பாக தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. இதில் மத்திய அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்துகொண்டு பாஜக அரசின் சாதனைகளை மக்கள் மத்தியில் விளக்கி கூறினர். அதேபோல் மாவட்டங்தோறும் கட்சியைப் பலப்படுத்த இன்னொரு வாய்ப்பாகவும் பயன்படுத்தப்பட்டது. பெரும்பாலும், இந்த சாதனை விளக்க பொதுக்கூட்டங்களில், திமுக அரசு மீது கடுமையான விமர்சனங்களும் முன் வைக்கப்பட்டன.
அதேபோல் நேற்று தமிழ்நாடு முழுவதும் பாஜக சார்பாக தமிழக அரசின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி போராட்டம் நடத்தப்பட்டது. இது பல்வேறு தரப்பினர் மத்தியில் கவனத்தை ஈர்த்த நிலையில், சில விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது. முக்கியமாக ராதாரவியின் பேச்சு மற்றும் அண்ணாமலையின் ஷிண்டே பற்றிய பேச்சு ஆகியவை பேசுபொருளாகியுள்ளது.
இந்த நிலையில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கீழ்பவானி பாசன கால்வாயில் கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
இதனைத்தொடர்ந்து திருப்பூர் மாவட்டம் நத்தக்காடையூரில் நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய சீமான், கீழ்பவானி கால்வாயில் கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டால் நிலத்தடி நீர் மற்றும் சுற்றுசூழல் பாதிக்கப்படும். எனவே விவசாயிகளின் எதிர்ப்பை மீறி, கீழ்பவானி கால்வாயில் கான்கிரீட் தளம் அமைக்கும் முடிவை தமிிழக அரசு நிரந்தரமாக கைவிட வேண்டும்.
இதுதொடர்பாக, இத்தொகுதியின் எம்எல்ஏ சட்டப்பேரவையில் தனி தீர்மானம் கொண்டு வந்து இந்த திட்டத்தை தடுக்க வேண்டும். இந்த விவகாரம் குறித்து விவசாயிகளிடம் கருத்து கேட்பதாக பாஜகவினர் கூறி வருவது வேடிக்கையாக உள்ளது. கடந்த ஓராண்டில் திமுக அரசு எதையும் செய்யவில்லை என சொல்லி வரும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, கடந்த 8 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக இதுவரை என்ன சாதித்துள்ளது என்பதை விளக்கிட வேண்டும் என்ற சீமான் தெரிவித்துள்ளார்.