கொரோனாவிலிருந்து மீண்டவர்.. கருப்பு பூஞ்சை தாக்கி பெண் தாசில்தார் பலி
திருப்பூர்: கருப்பு பூஞ்சை பாதிப்பால் பெண் தாசில்தார் ஒருவர் பலியாகிய சம்பவம் திருப்பூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூரை சேர்ந்தவர் கலாவதி, 52. ஊத்துக்குளி தாசில்தாராக பணியாற்றி வந்தார். கடந்த மே மாதம் இவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி, திருப்பூரில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர், உயர்சிகிச்சைக்கு பெருந்துறை மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கொரோனா தொற்றில் இருந்து வீடு திரும்பிய அவருக்கு, அவ்வப்போது உடல் உபாதை ஏற்பட்டு வந்தது. அதன்பின் நடந்த பரிசோதனையில் கருப்பு பூஞ்சை தாக்கியது உறுதியானது. மீண்டும், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்படாமல், ஒரு கண் செயலிழந்தது. தொடர் சிகிச்சையில் இருந்தும், பலனின்றி கலாவதி நேற்று இறந்தார். கலாவதிக்கு, கணவரும், மகனும் உள்ளனர்.
கண்களில் வலி, கண் பகுதியில் வீக்கம் போன்ற அறிகுறிகள் இருந்தால் அது கருப்பு பூஞ்சை அறிகுறியாக இருக்கக்கூடும் என்றும், உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications