கள்ளக்காதல்! சதா அழுத ஒன்றரை வயது பிஞ்சு.. முகத்தில் காலால் மிதித்தே கொன்ற கொடூரன்! தாயுடன் கைது
திருப்பூர்: கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததாக குழந்தையை மிதித்தே கொன்ற கள்ளக்காதலனையும் அதற்கு உடந்தையாக இருந்த தாயையும் போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் திருப்பூரில் நடந்தது.
திருப்பூர் பழைய ராமகிருஷ்ணாபுரத்தில் வாடகை வீட்டில் ஸ்டீபன் ஆரோக்கியசாமி (24), பிரியா (21) ஆகியோர் கணவன்- மனைவி போல் வாழ்ந்து வந்தனர். கடந்த 28ஆம் தேதி பிரியாவின் ஒன்றே கால் வயது ஆண் குழந்தை வீட்டு குளியலறையில் வழுக்கி விழுந்து மயங்கியதாக கூறிய பிரியா, அந்த குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து பிரேத பரிசோதனைக்காக குழந்தையின் உடல் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது. போலீஸார் இந்த மரணத்தை சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்திருந்தனர்.
இந்த நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையில் குழந்தையின் பின்னந்தலையில் தரையில் அடித்ததால் காயம் ஏற்பட்டதாகவும் முகத்தை அழுத்தியதாகவும் தெரியவந்தது. இதையடுத்து ஸ்டீபன் ஆரோக்கியசாமி, பிரியாவிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அதில் பல திடுக் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஸ்டீபனின் சொந்த ஊர் திண்டுக்கல் மாவட்டம் மல்லபுரம், பிரியாவின் சொந்த ஊர் திருச்சி மாவட்டத்தில் பூங்குடி. இவர்கள் இருவரும் காதலர்களாம். வீட்டில் எதிர்ப்பு கிளம்பியதால் இருவரும் வெவ்வேறு நபர்களை திருமணம் செய்து கொண்டனர்.
பிரியாவுக்கு 1 மகன், 1 மகள் உள்ளனர். மகளை முதல் கணவருடன் விட்டுவிட்டு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கணவரை விட்டுவிட்டு மகனோடு திருப்பூர் வந்தாராம். ஸ்டீபனும் பிரியாவும் கடந்த 3 மாதங்களாக திருப்பூரில் ஒன்றாக சேர்ந்து குடித்தனம் நடத்தி வந்தனர். அப்போது குழந்தை அடிக்கடி அழத் தொடங்கியதாம்.
இதனால் இவர்களால் சந்தோஷமாக இருக்க முடியவில்லை என்பதால் ஸ்டீபன், பிரியாவிடம் தகராறு செய்வது வழக்கமாம். கடந்த 5 நாட்களுக்கு முன்பு பழைய ராமகிருஷ்ணாபுரத்தில் உள்ள வாடகை வீட்டில் இருவரும் குடியேறினர். அப்போது குழந்தை அழுது கொண்டே இருந்ததாம்.
அன்றைய தினம் கோபத்தில் இருந்த ஸ்டீபன், குழந்தையின் தலையை பிடித்து சுவரில் அடித்து காலால் குழந்தையின் முகத்தில் மிதித்தும் கொன்றுள்ளார். இதில் குழந்தை மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்தது. இதையடுத்து இருவரும் சேர்ந்து குழந்தை பாத்ரூமில் வழுக்கி விழுந்தது போல் அக்கம் பக்கத்தினரையும் போலீஸாரையும் நம்ப வைக்க நாடகமாடியது அம்பலமானது.
இதையடுத்து இருவரையும் திருப்பூர் வடக்கு போலீஸார் கைது செய்துள்ளனர். பசிக்கு அழுததா, எதற்கு அழுதது என தெரியாமல் குழந்தையை கொன்ற அந்த காட்டுமிராண்டி, அதற்கு உடந்தையாக தாய் என்ற பெயரில் இருந்தவரையும் போலீஸார் கைது செய்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications