ரேஷனில் வருது மாற்றம்.. இனி ரேஷன் கடையில் இதுவும் இருக்கும்.. ரெடியாகுது ரசீதுகள்.. தமிழக அரசு அதிரடி
சென்னை: ரேஷன் கடைகளில் விரைவில் மாற்றம் வரப்போவதாக கூறப்படுகிறது. இதுகுறித்த தகவல் ஒன்று வெளியாகி உள்ள நிலையில், ரேஷன் அட்டைதாரர்களுக்கு நிம்மதி உணர்வு ஏற்பட்டுள்ளது.
ரேஷன் கடைகளில் கருவிழி சரிபார்ப்பு திட்டத்தை கொண்டு வரப்போவதாக தொடர்ந்து தகவல்கள் வந்தவண்ணம் இருந்தநிலையில், தமிழகம் முழுவதும் 35 ஆயிரம் ரேஷன் கடைகளில் கண் கருவிழி பதிவு செய்து, அதன் மூலமாக ரேஷன் பொருட்கள் பெற அரசாணை வெளியிடப்பட்டு, டெண்டரும் விடப்பட்டிருக்கிறது..

அதாவது, ஸ்மார்ட் ரேஷன் கார்டு அச்சிடுதல், பாயின்ட் ஆப் சேல் கருவிகள் பராமரிப்பு போன்ற பணிகளை "ஒயாசிஸ்" என்ற தனியார் நிறுவனம்தான் இதுநாள் வரை மேற்கொண்டு வந்தது. ஆனால், இதற்கான ஒப்பந்தம் முடிவடைந்துள்ள நிலையில், சமீபத்தில் டெண்டர் விடப்பட்டது. அதில், மறுபடியும் ஒயாசிஸ் நிறுவனத்திற்கே அனுமதி ஆணை தரப்பட்டுள்ளது.
அதே நிறுவனம்: அதாவது, கருவிழி சரிபார்ப்பு முறையில் பொருட்கள் வழங்குவதை உள்ளடக்கிய கணினிமய 2ம் கட்டத்தை செயல்படுத்தும் ஆணை, அதே தனியார் ஒப்பந்த நிறுவனத்திடம் வழங்கப்பட்டிருக்கிறது.
கருவிழி மூலம் பொருட்கள் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த, ஒயாசிஸ் நிறுவனத்திற்கே டெண்டர் வழங்கப்பட்டுள்ளதால், ரேஷனில் கருவிழி சரிபார்ப்பு திட்டமும் விரைவில் ஆரம்பமாகும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்தது.
நம்பிக்கை: அதற்கேற்றபடி, அமைச்சர் சக்கரபாணி ஒரு பேட்டி தந்திருந்தார்.. "ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறை அடிக்க செயல் இழந்து விடுகிறது. அதனால், பொருட்களை விநியோகிப்பதில் தாமதம் ஏற்படுவதாக புகார்கள் வருவதால், அனைத்து ரேஷன் கடைகளிலும் கருவிழி பதிவின் மூலம் பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இன்னும் 2 மாதத்திற்குள் 36 ஆயிரம் ரேஷன் கடைகளில், கருவிழிப்பதிவு மூலம் பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்ற நம்பிக்கை தகவலை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், இதுகுறித்த, குட்நியூஸ் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.. அதன்படி, ரேஷன் கடைகளில் கருவிழி சரிபார்ப்பு கருவிகள், ரசீது வழங்கும் பிரின்டர் சாதனங்கள் வைக்கும் பணிகள், வரும் 2024ம் ஆண்டு ஜனவரி முதல் துவங்க போகிறதாம்.. புத்தாண்டு துவங்கும் இந்த பணிகள், படிப்படியாக அடுத்த 3 மாதத்துக்குள் முடிக்க வேண்டும் என்றும் திட்டமிடப்பட்டுள்ளதாம்.
பொதுமக்கள் நிம்மதி: எனவே, வரும் மார்ச் மாத இறுதிக்குள், தமிழகம் முழுவதும் கருவிழிப்பதிவுகள் கொண்டுவரப்பட்டுவடும் என்பதால், ரேஷன் கடைகளில் நிலவிவரும், முறைகேடுகள், குறைபாடுகள் அனைத்துமே, முடிவுக்கு வரும் என்று நம்பப்படுகிறது. இந்த தகவலானது, ரேஷன் அட்டைதாரர்களுக்கு நிம்மதியை தந்து வருகிறது.












Click it and Unblock the Notifications