மாணவர்களிடம் விஷ கருத்தை திணிக்கும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி- கே.எஸ்.அழகிரி சுளீர் கண்டனம்
மன்னார்குடி: தமிழக மாணவர்களிடம் அதிகாரப்பூர்வமான ஆளுநர் மாளிகையில் அமர்ந்தபடியே விஷகருத்தை திணிக்கிறார் ஆர்.என்.ரவி என தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி கடுமையாக சாடியுள்ளார்.
மன்னார்குடியில் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களிடம் இன்று கூறியதாவது: தமிழக ஆளுநர் ஆர்.என் தினமும் செய்தியில் வரவேண்டும் என்பதற்காக ஏதாவது ஒன்றை சொல்லி வருகிறார். அதுவும் குறிப்பாக தமிழர்கள் ஏற்றுக் கொள்ளாத அல்லது தமிழ் உணர்வுகளுக்கு எதிரான செய்திகளை சொல்வதில் மிகவும் பயிற்சி பெற்றிருக்கிறார். அவருக்கு பயிற்சி கொடுத்திருக்கிறார்கள்.

என்ன பேசுகிறார் ஆளுநர்?
மாணவர்களிடையே அவர் உரையாற்றுகிறபோது இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஒன்றிணைத்தார்கள் என சொல்லுவது தவறானது; அவர்களுக்கு முன்பே இந்தியா ஒன்றிணைந்து இருந்தது என்று சொல்லி இருக்கிறார். தென்னிந்தியா முழுவதும் திராவிடமாக இருந்தது; இன்றைக்கு அதை தமிழ் என்று குறுக்கிவிட்டார்கள் என்று சொல்லுகிறார் . இவர் என்ன திராவிடம் தோல்வியடைந்து விட்டது என்று சொல்லுகிறாரா அல்லது தமிழை வேண்டும் என்றே சிதைத்து விட்டார்கள் என்று சொல்கிறாரா என்று எங்களுக்கு புரியவில்லை.

மொழி வரலாறு என்ன?
தமிழிலிருந்து தான் மலையாளம் சென்றது. தெலுங்கு சென்றது , கன்னடம் சென்றது. இதை யாரும் மறுத்து விடமுடியாது. மொழி வரலாற்றை நன்கு படித்தால் இது நன்றாக தெரியும் . தமிழர்கள் மேலாதிக்கம் செலுத்துவதற்காக நான் இதை சொல்லவில்லை. இப்படிதான் இந்த மொழியின் பிறப்பு இருந்தது. இதையெல்லாம் ஆளுநர் அவர்கள் நன்கு புரிந்துகொள்ள வேண்டும். அவருடைய நோக்கம் சமஸ்கிருதத்தை மேம்படுத்துவதற்காகவும் ஒரே பாரதம் என்கின்ற கொள்கையை மேம்படுத்துவதற்காகவும் சொல்லுகிறார் . ஒரே பாரதம் என்று சொல்லுவதில் தவறு இல்லை; காங்கிரஸ் கட்சி தான் இந்தியாவை ஒருங்கிணைத்த ஒரே கட்சி ; மொழி வழி மாநிலங்கள் என பிரித்து இந்தியாவின் ஒற்றுமையை மேம்படுத்தியது ஜவஹர்லால் நேரு. இல்லையென்றால் வங்காளதேசம் போல பாகிஸ்தன் பிரிந்ததை போல இந்தியாவும் சிதைந்து போய் இருக்கும் .

விஷகருத்தை திணிப்பதா?
ஆளுநர் தமது அதிகாரப்பூர்வமாக மாளிகையில் அமர்ந்து கொண்டு மாணவர்களுக்கு விஷ கருத்தை போதிக்கிறார் . இது மிகவும் தவறானது . தமிழ் கலாச்சாரம் ஏற்றுக் கொள்ளாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். காங்கிரஸ் கட்சி எந்த மொழிக்கும் எதிரானது அல்ல . ஹிந்தியோ அல்லது எந்த மொழியையுமோ நாங்கள்படிக்க வேண்டாம் என சொல்லவில்லை. ஆனால் அதை திணிக்க வேண்டாம் என்று தான் சொல்கிறோம். அதிகமாக வரிவிதித்தால் அதிக வருமானம் கிடைக்கும் என்று அரசாங்கங்கள் நம்புவது தவறு . அப்போதுதான் வரி எய்ப்பு வரும்; குறைவான வரியை விதித்தால் அனைவரும் வாியை கட்டுவார்கள் . நாம் எதிர்பார்ப்பதை விடை வருவாய் அதிகமாகும்.

வரி விதிப்பு
நாடாளுமன்றத்தில் ஒற்றை வரியில் சொன்னோம்- ஒரே வரி குறைவான வரி என்று. ஆனால் பாஜக 48 சதவிகிதம் வரை சென்று தற்போது 28 சதவீதத்தில் நிற்கிறார்கள். அது தேவையில்லை . பாரதிய ஜனதா கட்சி இதுவரையிலும் தேர்தல் வைத்து தலைவர்களை தேர்ந்தெடுத்தது இல்லை. ஆனால் காங்கிரஸ் கட்சியில் தேர்தல் வைத்து தலைவர்களை தேர்ந்தெடுக்கிறோம். ஆகையால் நாங்கள்தான் தான் ஜனநாயக கட்சி. இவ்வாறு கே.எஸ். அழகிரி கூறினார்.












Click it and Unblock the Notifications