Year Ender 2019: ஏன்டா விட்டுட்டு போனே.. அழ வைத்த சுஜித்.. உயிரை உலுக்கிய 80 மணி நேரம்!
திருச்சி: எத்தனை எத்தனை போராட்டங்கள்.. என்னெவெல்லாம் முடியுமோ அதையெல்லாம் செய்த மீட்புப்படையினர். இரவு பகலாக அயராமல் உழைத்த மீட்புப் பணியாளர்கள்.. அத்தனை பேரையும் ஏமாற்றி விட்டு போய் விட்டது அந்த செல்லக் குழந்தை.. நினைக்க நினைக்க மனம் ஏங்கித் தவித்தபடியே உள்ளது.
Recommended Video
கைக்கு எட்டியது என்ற நிலையில்தான் சுஜித்தை நாம் முதலில் பார்த்திருந்தோம். 26 அடி தொலைவில் கிடந்த அந்தப் பிஞ்சுக் குழந்தையை அதல பாதாளத்திற்கு நழவ விட்டு நாம் துடித்த துடிப்பு கொஞ்ச நஞ்சமல்ல.
80 மணி நேர மீட்புப் போராட்டத்தின் இறுதிக் கட்டத்தில் 20 நிமிடங்களில் சுஜித்தின் இறந்த உடலை எடுத்தனர் மீட்புப் படையினர். அவன் விழுந்த அதே போர்வெல் மூலமாகவே உடலையும் மீட்டனர். இறுதி நாளன்று அதிகாலை நான்கு மணியளவில் உடலை மீட்கும் பணியில் இறங்கினர். உடல் அழுகிய நிலையில் இருப்பதை கண்டுபிடித்த மீட்புப் படையினர் அதை எந்த அளவுக்கு பத்திரமாக மீட்க முடியும் என திட்டமிட்டனர்.

உடல் பாகங்கள்
இதையடுத்து 20 பேர் கொண்ட குழு கடைசி கட்ட மீட்புப் பணியில் ஈடுபட்டது. சுஜித் விழுந்து கிடந்த போர்வெல் மூலமாகவே உடலை வெளியே எடுத்தனர். உடலை எடுத்த போது சில பாகங்கள் போர்வெல்லிலேயே விழுந்து விட்டதாகவும் கூறப்பட்டது. அந்த அளவுக்கு உடல் சிதிலமடைந்து இருந்தது.

வருத்தம்
உடலை மீட்டு வெளியே கொண்டு வர கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் பிடித்ததாக சொன்னார்கள். அதாவது 80 மணி நேரப் போராட்டம் 20 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. உடலை வெளியே கொண்டு வந்தபோது மீட்புப் படையினர் பலரும் கலங்கிப் போய் அழுது விட்டனர். போலீசாரும் மிகவும் வருத்தமடைந்தனர். பல ஆயிரம் பேர் கூடி வந்து சிறுவனை மீட்கும் பணியை பார்த்துச் சென்றனர்.

நம்பிக்கை
எந்த அசம்பாவிதமும், பிரச்சினையும் இல்லாமல் மக்கள் வந்து போனதாக கூறும் போலீசார், அத்தனை பேரும் சுஜித் வந்து விடுவான் என்று நம்பிக் காத்திருந்தனர். நாங்களும் சுஜித்துக்காக பிரார்த்தித்தபடிதான் பணியில் ஈடுபட்டிருந்தோம். ஆனால் சுஜித் வராமலேயே போய் விட்டான் என்று கூறி கலங்கினர்.

கலாமேரி
சுஜித்தின் தாயார் கலாமேரிக்கு ஆறுதலாக சில பெண் போலீஸார் கூடவே இருந்துள்ளனர். அந்த தாயின் தவிப்பையும், அவரது அழுகையையும் பார்த்து கூடவே இருந்து ஆறுதல் சொல்லி வந்த அந்த பெண் போலீஸார், கடைசியில் கலாமேரியின் தாயுணர்வை சுஜித்தின் மரணச் செய்தி புரட்டிப் போட்டதை பார்த்து கலங்கி போய் அழுது விட்டனராம்.

அமைச்சர்கள்
குழந்தை போர்வெல்லில் விழுந்துவிட்டான் என்ற தகவல் அறிந்ததுமே மீட்கும் பணி நடைபெறும் இடத்துக்கு அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், வளர்மதி உள்ளிட்டோர் விரைந்தனர். மாவட்ட கலெக்டர், மாவட்ட எஸ்பி, மணப்பாறை எம்எல்ஏ சந்திரசேகர் மற்றும் அதிகாரிகள் குவிந்தனர். குழந்தையை எப்படி எடுக்கலாம் என்று மீட்பு படையினருடன் ஆலோசித்தவாறே அமைச்சர்கள் இருந்ததுடன், சுஜித்தை அடக்கம் செய்யும் வரை அவர்களின் பங்களிப்பை கண்டு தமிழக மக்கள் மனசார பாராட்டினர்.

மாதேஷ்
மீட்பு பணியின்போது கவனிக்கப்பட்ட ஒரு சிறுவன் மாதேஷ்.. 14 வயது.. அதே ஊரை சேர்ந்தவன்.. குழந்தையை எடுக்க வீரர்கள் போராடுகிறார்கள் என்றால், இந்த மாதேஷ் இங்குமங்கும் ஓடுகிறான்.. பதைபதைக்கிறான்.. மீட்பு குழுவினர் பக்கத்திலேயே இருந்து அவர்களுக்கு என்ன வேண்டுமோ அதை எடுத்து எடுத்து தந்து கொண்டிருக்கிறான்.. தண்ணீர் தருகிறான்.. கயிறை இழுத்து பிடிக்கிறான்.. அவன் கால்கள் ஓரிடத்தில் இல்லை.. அவன் முகமெல்லாம் பதற்றமாகவே காணப்பட்டது.

அதிர்ச்சி
சுஜித் மீட்பு விஷயத்தில் மற்றொரு மறக்க முடியாத சிறுவன், சுஜித்தின் அண்ணன்.. தம்பி திரும்பி வருவான் என்று பெரும் எதிர்பார்ப்புடன் இருந்தான்.. ஆனால் கடைசி வரை தம்பி மீளவேயில்லை என்பது அவனை பெரிய அதிர்ச்சிக்குள்ளாக்கி விட்டது. அதிர்ச்சிகளை சந்திக்கக் கூடிய வயதில் அவன் இல்லை. எனவே அவனால் தனது உணர்ச்சிகளை எப்படி காட்டுவது என்று கூட தெரியாமல் அவன் தவித்த காட்சிகளை கண்டு மனம் கலங்கியது.. சுற்றிலும் என்ன நடக்கிறது என்று தெரியாமல், கவலை தோய்ந்த விழிகளுடன் தனது தந்தையின் பிடியில் இருந்தபடி வெறித்து கொண்டிருந்தான் இந்த சிறுவன்.. சின்ன பெட்டிக்குள் தம்பியின் சடலத்தை என்ன நினைத்து பார்த்திருப்பானோ தெரியாது!












Click it and Unblock the Notifications