திமுக கூட்டணியில் புதிய கட்சி! புதிர் போடும் கே.என்.நேரு! எந்தக் கட்சி இன் -எந்தக் கட்சி அவுட்!
திருச்சி: நாடாளுமன்றத் தேர்தலின் போது திமுக கூட்டணியில் புதிய கட்சி வரலாம் எனக் கூறி எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறார் அமைச்சர் கே.என்.நேரு.
திருச்சி மாநகர திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனைக் கூறினார்.

திமுக கூட்டணியில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, கொமதேக, உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
தமிழக வாழ்வுரிமைக் கட்சியை பொறுத்தவரை, வேல்முருகன் அண்மைக்காலமாக திமுகவுடன் முரண்படத் தொடங்கியுள்ளதால் அந்தக் கூட்டணி தொடர்கிறதா என்பது இரண்டு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகளுக்கே குழப்பமாக உள்ளது.
இதனிடையே திமுக கூட்டணியில் பாமக இடம்பெறக் கூடும் என ஒரு தகவல் உலா வரும் நிலையில், அரசுக்கு எதிரான அன்புமணியின் அதிரடி நடவடிக்கைகளை பார்த்தால் அதற்கு சாத்தியமே இல்லை என்பது தெளிவாகிறது.
இந்தச் சூழலில் எஸ்.டி.பி.ஐ. கட்சி திமுகவுடன் நெருங்கி வருவதாக தெரிகிறது. அண்மையில் திமுக நடத்திய இஃப்தார் விழாவில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலச் செயலாளர் நெல்லை முபாரக் கலந்துகொண்டார். அவருக்கு அழைப்பிதழ் கொடுத்து அழைக்கச் சொன்னதே திமுக தலைமை தான் எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் நாடாளுமன்றத் தேர்தலின் போது திமுக கூட்டணியில் எஸ்.டி.பி.ஐ. வந்தாலும் வரலாம் என புதிர் போட்டு பேசியிருக்கிறார் திமுக முதன்மைச் செயலாளரும், அமைச்சருமான கே.என்.நேரு.

எஸ்.டி.பி.ஐ.யை பொறுத்தவரை இளைஞர்கள் அதிக எண்ணிக்கையில் உறுப்பினர்களாக இருப்பதுடன் ஓரளவு கட்டமைப்புடன் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே தற்போதைய சூழலில் திமுக கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேற வாய்ப்பில்லை என்பதும் புதுவரவாக எஸ்.டி.பி.ஐ. இணையலாம் எனவும் தெரிகிறது.












Click it and Unblock the Notifications