மக்களே மழைக்காலத்தில் கவனம்.. புளுடூத் மூலம் பேசிய வாலிபருக்கு நேர்ந்த சோகம்! திருச்சியில் ஷாக்
திருச்சி: திருச்சி லால் குடி அருகே புளுடூத் போட்டுக்கொண்டு செல்போனில் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த வாலிபர் மின்னல் தாக்கி பலியானார். இந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை சூடுபிடித்துள்ளது. மாநிலம் முழுவதும் பரவலாக மழை வெளுத்து வாங்குகிறது. மழைக்காலங்களில் இடி, மின்னல் தாக்கி உயிரிழப்பு ஏற்படும் சம்பவங்களும் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. பொதுவாக மழைக்காலங்களில் வெட்டவெளி அல்லது மரங்களுக்கு அடியில் நிற்பதை தவிர்க்க வேண்டும் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்துகிறது.

அதேபோல், இடி மின்னல் அடித்துக் கொண்டு இருக்கும் போது திறந்த வெளியில் நின்று செல்போன் பேசுவதை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுகிறது. இந்த நிலையில், திருச்சியில், புளூடுத் போட்டுக்கொண்டு செல்போனில் பேசிக்கொண்டு இருந்த இளைஞர் மின்னல் தாக்கி உயிரிழந்த சோக சம்பவம் திருச்சியில் நடந்துள்ளது. இதுபற்றிய விவரங்களை காணலாம்.
புளுடூத்தில் கனெக்ட் செய்து: திருச்சி மாவட்டம், லால்குடி அருகே பல்லவபுரம் என்ற பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 28). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. திருச்சி குமளூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் தற்காலிக அடிப்படையில் டிரைவராக பணியாற்றி வந்தார். நேற்று மாலையில் இருந்தே லால் குடி பகுதியில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.
மழை பெய்து கொண்டு இருந்த போது வீட்டில் இருந்த ஜெயக்குமார், தனது செல்போனை புளுடூத்தில் கனெக்ட் செய்து விட்டு அதன் மூலம் செல்போனில் நண்பருடன் பேசிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ஜெயக்குமார் மீது மின்னல் தாக்கியுள்ளது. இதில் படுகாயம் அடைந்த ஜெயக்குமார் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார்.
மின்னல் தாக்கி பலி: செல்போனில் பேசிக்கொண்டு இருந்த நபர் திடீரென காயங்களுடன் மயங்கி விழுந்ததை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்டு லால்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு ஜெயக்குமாரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் குடும்பத்தினர் கதறி அழுதனர்.
செல்போனில் பேசிக்கொண்டு இருந்த நபர் மின்னல் தாக்கி உயிரிழந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் உடலை மீட்ட போலீசார், பிரதே பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். செல்போனில் பேசிக்கொண்டு இருந்த நபர் மின்னல் தாக்கி பலியான சம்பவம் திருச்சி லால்குடி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications