திருச்சி எஸ்ஐ உள்பட 4 பேர் சஸ்பெண்ட்.. ரூ.1.20 லட்சம் லஞ்சத்தால் வந்த சிக்கல்! எஸ்பி வருண் உத்தரவு
திருச்சி: திருச்சி மாவட்டம் வளநாடு பகுதியில் ரோந்து பணியின்போது நாட்டு துப்பாக்கி வைத்து பறவைகளை வேட்டையாடியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க ரூ.1.20 லட்சம் லஞ்சம் வாங்கிய எஸ்ஐ உள்பட 4 போலீஸ்காரர்களை சஸ்பெண்ட் செய்து திருச்சி எஸ்பி வருண் குமார் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை வளநாடு பகுதியில் கடந்த மே மாதம் 9 ம் தேதி எஸ்பி தனிப்படை பிரிவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். இந்த வேளையில் அங்கு சிலர் சந்தேகப்படும் படியாக சுற்றி வந்தனர்.

இதையடுத்து அவர்களை பிடித்து விசாரித்தனர். இந்த விசாரணையின்போது அவர்கள் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதும், அவர்களின் பெயர்கள் சதாசிவம், ராம், நாகராஜ் உள்ளிட்டவர்கள் என்பதும் தெரியவந்தது.
மேலும் அவர்கள் ஏர்கன் எனப்படும் நாட்டுத்துப்பாக்கி வைத்து பறவைகளை வேட்டையாட முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் பிடித்து நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்வதாக தெரிவித்தனர். இந்த வேளையில் பிடிபட்டவர்கள் தங்களை விட்டு விடும்படி கெஞ்சியுள்ளனர்.
இதையடுத்து தனிப்படை எஸ்பி தனிப்படை போலீசார் அவர்களிடம் ரூ.1.20 லட்சம் தந்தால் வழக்குப்பதிவு செய்யாமல் விட்டு விடுவதாக தெரிவித்துள்ளனர். அதற்கு அவ்வளவு பணம் இல்லை என்று அவர்கள் கூறியுள்ளனர். ஆனால் போலீசார் விடவில்லை. இதையடுத்து வழக்கில் சிக்காமல் தப்பிக்க வேண்டும் என்பதற்காக சதாசிவம் தனது உறவினர் விஜயகுமார் மூலம் ரூ.1.20 லட்சத்தை லஞ்சமாக போலீசாருக்கு வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த பணத்தை எஸ்பி தனிப்படையில் இடம்பெற்றிருந்த எஸ்ஐ லியோ ரஞ்சித், போலீஸ்காரர்களாக ஷாகுல் ஹமீது, வீரபாண்டி, மணிகண்டன் ஆகியோர் பங்கு பிரித்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே வேட்டை கும்பலை சேர்ந்தவர்கள் போலீஸ்காரர்கள் லஞ்சம் வாங்கியது பற்றி திருச்சி மாவட்ட எஸ்பி வருண் குமாரிடம் புகார் அளித்துள்ளனர்.
இந்த புகாரை தொடர்ந்து வருண் குமார் விசாரணைக்கு உத்தரவிட்டார். இந்த விசாரணையில் எஸ்ஐ உள்பட போலீஸ்காரர்கள் 4 பேரும் லஞ்சம் வாங்கியது உறுதியானது. இதையடுத்து எஸ்பி தனிப்படையில் இடம்பெற்றிருந்த எஸ்ஐ லியோ ரஞ்சித், போலீஸ்காரர்களாக ஷாகுல் ஹமீது, வீரபாண்டி, மணிகண்டன் ஆகியோர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்த சஸ்பெண்ட் உத்தரவை திருச்சி எஸ்பி வருண் குமார் பிறப்பித்துள்ளார்.












Click it and Unblock the Notifications