சமயபுரம் கோயிலுக்கு நடந்து சென்ற பக்தர்கள் 5 பேர் லாரி மோதி பலி.. தஞ்சை அருகே சோகம்
திருச்சி தஞ்சை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு பாதயாத்திரையாக நடந்து சென்ற பக்தர்கள் மீது சரக்கு லாரி மோதியதில் 5 பேர் உயிரிழந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே உள்ள கண்ணுக்குடிபட்டியைச் சேர்ந்த பக்தர்கள் சுமார் 25 பேர் திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு பாதயாத்திரையாக நடந்து சென்றுள்ளனர்.

இன்று அதிகாலை தஞ்சாவூர் மாவட்டம், வளம்பக்குடி, திருச்சி - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் அவர்கள் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சரக்கு ஏற்றிக் கொண்டு வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்த பக்தர்கள் மீது மோதியது.
இதில், சின்னையன் மகன் முத்துசாமி (60), கார்த்திக் மனைவி மீனா (26), முருகன் மனைவி ராணி (37), ரமேஷ் மனைவி மோகனாம்பாள் என 3 பெண்கள் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த சங்கீதா, லட்சுமி ஆகிய 2 பேர் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டனர். படுகாயமடைந்த லட்சுமி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சங்கீதா என்பவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த கோர விபத்து தொடர்பாக செங்கிப்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாதயாத்திரை சென்ற பக்தர்கள் அதிகாலையில் விபத்தில் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications