உணவு பண்டம் என நினைத்து ஜெலட்டின் குச்சியை கடித்த 6 வயது சிறுவன் வாய் சிதறி பலி.. திருச்சியில் சோகம்
திருச்சி: திருச்சியில் ஏதோ உணவு பொருள் என நினைத்து ஜெலட்டின் குச்சியை கடித்த 6 வயது சிறுவன் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம், அலகரை மேற்கு பகுதியைச் சேர்ந்தவர் கங்காதரன் (32). இவரது தம்பி பூபதி(31). கூலித் தொழிலாளர்களான இவர்கள் இருவரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் கங்காதரன் மற்றும் உறவினர் மோகன்ராஜ் உள்பட 5 பேர் மணமேடு காவிரி ஆற்றில் மீன் பிடிப்பதற்காக 3 வெடிமருந்து (ஜெலட்டின்) குச்சிகளை வாங்கியுள்ளனர்.

வெடிமருந்து
இதில் 2 குச்சிகளை வைத்து மீன் பிடித்துவிட்டு மீதமிருந்த ஒரு குச்சியை பூபதி தனது வீட்டில் வைத்திருந்தார். அப்போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த பூபதியின் 6 வயது மகன் விஷ்ணு, அந்த ஜெலட்டின் குச்சியை ஏதோ உணவு பண்டம் என நினைத்து கடித்துவிட்டார். அப்போது அந்த குச்சியில் இருந்த வெடி மருந்து வெடித்து சிதறியது.

அடக்கம்
இதனால் சிறுவனின் வாயில் படுகாயம் ஏற்பட்டது. வலியால் துடித்த சிறுவனை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அழைத்து செல்வதற்கு முன்னர் அவர் இறந்துவிட்டார். வெடிமருந்துகளை வீட்டில் அத்துமீறி வைத்திருந்த விவகாரம் வெளியே தெரிந்தால் போலீஸ் கேஸ் ஆகிவிடும் என அச்சமடைந்த பூபதி, தனது நண்பர்களின் உதவியுடன் சிறுவனுக்கு இறுதிச் சடங்குகளை நடத்தி அன்றைய தினம் இரவே அடக்கம் செய்து விட்டார்.

விசாரணை
இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் வெடிமருந்தை விற்பனை செய்ததாக பாப்பாபட்டியை சேர்ந்த செல்வக்குமார், பூபதியின் அண்ணன் கங்காதரன், மோகன்ராஜ் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வெடிமருந்து செல்வக்குமாருக்கு எப்படி கிடைத்தது என்பது குறித்தும் விசாரணை நடத்தப்படுகிறது.

பசு பலி
கேரளாவில் வெடிமருந்து வைத்திருந்த அன்னாசி பழத்தை உண்ட கருவுற்ற யானை பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அது முடிவதற்குள் ஹிமாச்சலில் ஒரு பசு மாட்டுக்கு கோதுமை மாவு கலந்து உருண்டையில் வெடிமருந்தை வைத்து கொடுத்ததால் அதை கடித்த மாட்டின் வாய் சிதறி படுகாயமடைந்தது. தற்போது ஜெலட்டின் குச்சியை கடித்த 6 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications