திக் திக் 80 மணி நேரம்.. ஒவ்வொரு நிமிடமும் உயிர் போய்.. கடவுளே உனக்கு இரக்கமில்லையா!
Recommended Video
மணப்பாறை: கடவுளே உனக்கு இரக்கமில்லையா... என்று கேள்வி கேட்க வைத்த அந்த 80 மணி நேரம்.. ஒவ்வொரு நிமிட நேர மீட்பு பணி போராட்டமும் பரபரப்புடன்கூடிய பதற்றத்தையே தந்தது... இவ்வளவு நீண்ட நெடிய நேரத்துடன் மக்கள் பதட்டமாக இதற்கு முன்பு இருந்தது கிடையாது.. எல்லாமே குழந்தை சுஜித்துக்காகத்தான்.. எப்படி நம்மை இறுக்கமாக கட்டிப்போட்டன அந்த தருணங்கள்?!
25ம் தேதி சாயங்காலம் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தான் சுஜித்.. அங்கே ஒரு குழி இருப்பதுகூட அந்த பிஞ்சுக்கு தெரியாது.. ஆனால் 600 அடி ஆழ பள்ளம் என்பது பெற்றோருக்கு கண்டிப்பாக தெரியும்.. எனினும் அலட்சியத்தின் உச்சம்தான், சுஜித்தை இந்த குழியில் விழ வைத்துவிட்டது.
குழந்தை குழிக்குள் விழுந்துவிட்டான் என்றபோதுகூட இதை யாரும் பெருமளவு ஆபத்தாக பார்க்கவில்லை.. வழக்கமான ஒன்றுதான் என்றும், எப்படியும் குழந்தையை காப்பாற்றிவிடுவார்கள் என்ற நம்பிக்கையும் அப்போதே நம்மிடம் வந்து ஒட்டிக் கொண்டது. காரணம்.. 25 அடி ஆழத்தில்தான் குழந்தை விழுந்துகிடந்தான்.
மறக்கவே முடியாத ஜெஸ்ஸிகா.. ஆனால் அமெரிக்கா சுதாரிச்சுச்சு பாருங்க.. நாம நிறைய கத்துக்கணும்!
தவிப்பு
பலகட்ட முயற்சியும் அன்றைய இரவே அரங்கேறியது... இதன்பின்புதான் 88 அடியில் போய் சிக்கிக் கொண்டான்.. ஒரு நிமிடம்கூட நாங்கள் வீணாக்கிவிட மாட்டோம் என்ற தவிப்பு தீயணைப்புத் துறையினர், தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரிடையே தென்பட்டது. குழந்தைக்கு மூச்சு இருக்கிறது.. குழந்தை கை அசைக்கிறான்.. கால் அசைக்கிறான் என்ற அவனது அங்க அசைவுகள்தான் தமிழக மக்களுக்கே நிம்மதி மூச்சை தந்தது... அவனை மீட்டு விட வேண்டும் என்ற உத்வேகத்தை தந்தது!
விடிந்தால் தீபாவளி
விடிந்தால் தீபாவளி.. இப்படி ஒரு பண்டிகை புறக்கணிப்பு நம் தமிழகத்தில் இதற்கு முன்பு நடந்தது இல்லை. சுஜித் வெளியே வந்துடட்டும்.. அப்பறம்தான் எங்களுக்கு தீபாவளி என்று மக்கள் ஆணித்தரமாக சொல்லிவிட்டனர். குழி தோண்டும் இடத்துக்கு நாம போய் என்ன ஆக போகிறது என்று தெரிந்தாலும் மக்களின் அங்கலாய்ப்புக்ளை அடக்க முடியவில்லை.. டூவீலர்களில் படையெடுத்து குவிந்துவிட்டனர்.
ரிக் மெஷின்
இன்னொரு பக்கம், எப்படியெல்லாம் குழந்தையை மீட்கலாம் என்ற பல கருத்துக்கள், ஆலோசனைகள், அமைச்சர்களின் முன்னிலையில் நடந்தன.. அதில்ஒன்றுதான் ஆழ்துளைக் கிணற்றுக்கு பக்கவாட்டில் சுரங்கம் அமைத்து குழந்தையை மீட்பது என்பது. இதற்காகத்தான் அந்த ரிக் மெஷினை கொண்டு வந்தார்கள்.
ரிப்பேர்கள்
தீபாவளியன்று காலை 3 மீட்டர் தொலைவில் இந்த குழி தோண்டும் பணி ஆரம்பமானது. நம்பிக்கையுடன்தான் துளைக்கான முதல் புள்ளி ஆரம்பமானது. ஆனால், போக போக பாறைகள் குறுக்கே வரும் என்று யாருக்கும் தெரியாது. துளையிடும் பணி ரொம்பவும் மெதுவாகவே நடந்தது. அதிநவீன மெஷின் என்று சொல்லப்பட்ட அந்த ரிக்மெஷின் 25 அடி ஆழம் தோண்டப்பட்ட பின்பு ரிப்பேர் ஆகிவிட்டது. 2-வது ரிக் இயந்திரம், கொண்டு வரப்பட்டது.. அப்போது குழந்தை குழிக்குள் விழுந்து 4-ம்நாள் அது.
கடும் பாறைகள்
இருந்தாலும் இதை கொண்டு 10 அடிகளுக்கு மேல் கூட தோண்ட முடியவில்லை. இதற்கு பிறகு திரும்பவும் ஆலோசனை நடந்தது. "பாறைகளை கண்டு இயந்திரங்களே திணறுகின்றன" என்று விஜயபாஸ்கர் விரக்தியுடன் சொல்லவும்தான் 4 நாள் முயற்சியும் வீணாகி விட்டது என்பது தெரியவந்தது. குழந்தை மூச்சுவிடும் சத்தம் கேட்கவில்லை என்றதுமே தமிழக மக்கள் நிசப்தமாகி விட்டனர்.. பிரார்த்தனைகளின் தீவிரம் அதிகமானது!
துளையிடும் பணி
இதையடுத்துதான், போர்வெல் மெஷின் மூலம் துளையிடும் முயற்சி நடந்தது. 55 அடி ஆழம் மொத்தமாக தோண்டப்பட்ட நிலையில், ஆழத்தில் இருக்கும் ஆக்ஸிஜன் குறித்தும், வெட்டப்பட்ட பாறையின் தன்மை குறித்தும் அறிந்துவர உள்ளே ஒருவீரர் கயிறு கட்டிக் கொண்டு உள்ளே இறங்கினார். அவர் குறியீடு வைக்கப்பட்ட இடத்தில் மீண்டும் போர்வெல் மெஷினில் துளையிடும் பணி நடந்தது.
தடங்கல்கள்
நடுநடுவே பல தடங்கல்கள்.. மழை பொழிவு.. மண் சரிவு.. எண்ணெய் கசிவு என ஆயிரத்தெட்டு பிரச்சனைகள்.. எல்லாவற்றையும் தாண்டியே இந்த மீட்பு பணி நடந்தது.. இரவு 9.55 மணிக்கு இன்னொரு தீயணைப்பு வீரர் அஜித் குமார் ஏணி மூலம் பள்ளத்திற்குள் இறங்கினார். பாறைகளை பெல்ட்டில் இணைக்க, அதன்பிறகுதான் அந்த பாறைகள் எல்லாம் வெளியேற்றப்பட்டது.
அறிவிப்பு
அப்போதுதான் தலையில் இடி விழுந்த மாதிரி அந்த செய்தி வந்தது. "கிணத்துல இருந்து துர்நாற்றம் வீசுகிறது" என்றனர்.. கொஞ்ச நேரத்தில் குழந்தை இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், ராத்திரி 10 மணியில் இருந்தே இதைதான் ராதாகிருஷ்ணன் சொல்லி கொண்டிருந்தார். மருத்துவக்குழுவை சோதனைக்காக அனுப்பியிருக்கிறோம் என்றும் தெரிவித்திருந்தார். இருந்தாலும் துளியளவு நம்பிக்கை ஒட்டிக் கொண்டே இருந்தது.
போஸ்ட் மார்ட்டம்
விடிகாலை 2:30 மணிக்கு அழுகிய நிலையில் சடலம் கிடப்பதாக அறிவிக்கப்பட்டது. 4:30 மணிக்கு குழந்தையை சடலமாக வெளியே எடுத்தனர். உடனே மணப்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு போஸ்ட் மார்ட்டம் செய்யப்பட்ட கையோடு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். அவ்வளவுதான் எல்லாமே முடிஞ்சு போச்சு.. திக் திக் என்ற அந்த 80 மணி நேர மீட்பு போராட்டத்தை இனி யாராலும் மறக்க முடியாது!
அழ வைத்து விட்டாயே
அமைச்சர் விஜயபாஸ்கர் வலிகளுடன் சொன்ன இந்த வரிகள்தான் இப்போது அனைவரின் எண்ண ஓட்டமாகவே நடமாடி கொண்டிருக்கிறது.."இந்த உலகமே தன் பிள்ளையாய் நினைத்த சுஜித் அழுகுரல் என்னுள் இன்னும் ஒலிக்கிறது.. இப்படி எம்மை புலம்பி அழ விடுவாய் என்று எண்ணவில்லை"!