திருச்சியில் சம்பவம்... குண்டர் சட்டத்தின் கீழ் 37 பேர் மீது நடவடிக்கை
திருச்சி: திருச்சி மாவட்டத்தில் 2018-ம் ஆண்டு 1,564 சாலை விபத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், குண்டர் சட்டத்தின் கீழ் 37 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் ரவுடியிசம், கட்டப்பஞ்சாயத்து, ஆள்கடத்தல் உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
இந்த ஆண்டில் மணல் திருட்டில் ஈடுபட்ட 2 பேர், விபசார தொழில் நடத்திய 2 பேர் உள்பட மொத்தம் 37 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

3,347 வழக்குகள் பதிவு
வழிப்பறி, சங்கிலி பறிப்பு ஆகிய சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளிடம் இருந்து 82 சதவீதம் சொத்துக்கள் கைப்பற்றப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத மது விற்பனை, கள்ளச்சாராயம் விற்பனை உள்பட இந்த ஆண்டு மட்டும் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் 3,347 வழக்குகள் பதிவு செய்துள்ளனர். இதில் 2 பேர் தடுப்பு காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

1,564 சாலை விபத்து
கடந்த 2017-ம் ஆண்டில் திருச்சி மாவட்டத்தில் நடந்த சாலை விபத்துகளில் 419 பேர் இறந்தனர். 2018-ம் ஆண்டு சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை குறைந்து 312 பேர் இறந்துள்ளனர். 2018-ம் ஆண்டில் மட்டும் 1,564 சாலை விபத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வாகனம் மூலம் விழிப்புணர்வு
விபத்துகள் தொடர்பான விழிப்புணர்வு வாசகங்கள் மற்றும் சாலைவிதிகளை பிரதிபலிக்கும் எல்.இ.டி. டி.வி. அடங்கிய வாகனம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. சாலை பாதுகாப்பு விதிகளை முறையாக நடைமுறைப்படுத்தி விபத்துகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

விழிப்புணர்வு முகாம்கள்
திருச்சி மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்கும் பொருட்டு கண்காணிப்பு கேமரா பொருத்துவது குறித்து விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications