''திருந்துங்க.. இல்லையெனில் கதியற்றுப் போவோம்''.. அதிமுக நிர்வாகி போஸ்டரால் திருச்சியில் பரபரப்பு!
அதிமுகவில் ஒற்றுமையை வலியுறுத்தி கட்சி நிர்வாகி போஸ்டர் ஒட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி : "அதிமுக தலைவர்களே.. திருந்துங்கள் இல்லையெனில் கதியற்றுப் போவோம்" என திருச்சியின் பல்வேறு பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எடப்பாடி பழனிசாமி வசம் அதிமுக வந்த பிறகு தொடர்ச்சியாக 8 தேர்தல்களில் தோல்விகளை சந்தித்துள்ளதை ஓபிஎஸ் அணியினர் விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில், அதிமுகவின் உண்மை விசுவாசி என்ற பெயரில் திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர், ஈபிஎஸ், ஓபிஎஸ்ஸுக்கு வேண்டுகோள் விடுத்து போஸ்டர் ஒட்டியுள்ளார்.

ஓபிஎஸ் - ஈபிஎஸ்
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட குழப்பத்தைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆனார். தனியாகச் செயல்பட்ட ஓபிஎஸ், ஈபிஎஸ்ஸுடன் இணைந்த நிலையில், சசிகலா கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அதிமுகவில் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் பணியாற்றி வந்தனர். ஆட்சியில் முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வமும் பணியாற்றினர். ஆட்சி காலம் முடிவடைந்த நிலையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் அதிமுகவின் ஓபிஎஸ் - ஈபிஎஸ் இடையே மோதல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, இரு தரப்பினரும் தனித்தனி அணிகளாகச் செயல்பட்டு வருகின்றனர்.

ஈரோட்டில் பின்னடைவு
இதைத்தொடர்ந்து, அதிமுகவின் தலைமை பொறுப்பு யாருக்கு என்பதில் இரு தரப்பினரும் சட்டப்போராட்டம் நடத்தி வருகின்றனர். சமீபத்தில் வந்த உச்ச நீதிமன்ற தீர்ப்பின் மூலம் எடப்பாடி பழனிசாமி வசமே அதிமுக இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையே சமீபத்தில் நடைபெற்ற ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் தென்னரசு, காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனிடம் படுதோல்வியை தழுவினார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தோல்வி எடப்பாடி பழனிசாமிக்கு சறுக்கலாக அமைந்துள்ளது. ஓபிஎஸ் - ஈபிஎஸ் பிளவே இந்த படுதோல்விக்குக் காரணம் என விமர்சிக்கப்படுகிறது.

தொடர் தோல்வி
எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு அடுத்தடுத்து நடைபெற்ற தேர்தல்களில் அதிமுக தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகிறது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தோல்வி, எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக சந்தித்த 8வது தோல்வி. 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தோல்வி, அதற்கு முன்னதாக நாடாமன்றத் தேர்தலில் தோல்வி, ஊரக உள்ளாட்சி, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், இடைத்தேர்தல்கள் என அனைத்து தேர்தலிலும் தோல்விகளை சந்தித்து வந்ததைக் குறிப்பிட்டு ஓபிஎஸ் தரப்பினர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

திருந்துங்கள்
இந்த நிலையில் அதிமுகவில் கட்சித் தலைவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி திருச்சியில் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. எம்.ஜி.ஆர், அம்மாவின் உண்மை விசுவாசி ஆர்.டி.சிவபாலன், ஸ்ரீரங்கம் பகுதி செயலாளர் (கிழக்கு) ஒட்டியுள்ள அந்த போஸ்டரில், "அதிமுக தலைவர்களே.. ஆட்சியை இழந்தோம். நாடாளுமன்றத்தை துறந்தோம். உள்ளாட்சியில் ஒதுக்கப்பட்டோம். ஈரோட்டில் இரட்டை இலையால் காப்புத்தொகை பெற்றோம்.. திருந்துங்கள் இல்லையெனில் கதியற்றுப் போவோம்" என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications