அதிமுக மாஜி அமைச்சர் இல்லத் திருமண விழா! மரங்களை வெட்டியதால் திருச்சி கலெக்டர் டென்ஷன்!
திருச்சி: அதிமுக முன்னாள் அமைச்சர் என்.ஆர்.சிவபதி இல்ல திருமண விழாவுக்காக அனுமதியின்றி மரங்களை வெட்டிய தகவலறிந்து நிகழ்விடத்திற்கே சென்று டோஸ் விட்டிருக்கிறார் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார்.
அரசுக்கு சொந்தமான இடத்தில் மரங்களை வெட்டவும், மரக்கிளைகளை ஒடிக்கவும் யார் அனுமதி கொடுத்தது என கடுமை காட்டியிருக்கிறார்.
மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று மரங்களை வெட்டுவதை தடுத்து நிறுத்தியது திருச்சி மத்திய பேருந்து நிலையப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மாஜி அமைச்சர்
அதிமுக முன்னாள் அமைச்சர் என்.ஆர்.சிவபதி இல்லத் திருமண விழா வரும் 29ஆம் தேதி திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கலையரங்கம் வளாகத்தில் நடைபெறுகிறது. இதற்கான வரவேற்பு விழா 28ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் பலர் கலந்துகொள்கின்றனர். இதேபோல் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் சிவபதி இல்ல மண விழாவில் கலந்துகொள்கிறார்.

தடபுடல் ஏற்பாடுகள்
எடப்பாடி பழனிசாமி தனது இல்ல திருமண விழாவுக்கு வருகை தரவுள்ளதால் ஏற்பாடுகளை தடபுடலாக கவனித்து வருகிறார் முன்னாள் அமைச்சர் சிவபதி. ஆரம்பகாலத்தில் ஒன்றாக சட்டமன்றம் சென்றவர்கள் என்பதால் மாமா, மாப்பிள்ளை எனப் பேசிக்கொள்ளும் அளவுக்கு எடப்பாடி பழனிசாமியும், என்.ஆர்.சிவபதியும் நெருக்கமானவர்கள். இதனிடையே கலையரங்கம் வளாகத்தில் பந்தல் அமைப்பதற்காக அங்கிருந்த மரக்கிளைகள் ஜேசிபி பொக்லைன் மூலம் ஒடிக்கப்பட்டன.

கலையரங்கம் வளாகம்
கலையரங்கம் வளாகத்தில் திருச்சி பிரஸ் கிளப் அமைந்துள்ளதால் அங்கு வரும் பத்திரிகையாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்களை சந்திக்க வரும் பொதுமக்கள் என பலரும் மர நிழலில் தங்கள் வாகனங்களை நிறுத்திவிட்டுச் செல்வார்கள். இந்நிலையில் அதற்கு வழியில்லாத வகையில் மரங்கள் வெட்டப்பட்டதால் இது தொடர்பான தகவல் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து ஆன் தி ஸ்பாட்டுக்கு சென்ற அவர் மரங்களை வெட்டவோ கிளைகளை ஒடிக்கவோ கூடாது என கறாராக கூறினார்.

எடப்பாடியை வரவேற்க
மாவட்ட ஆட்சியர் வந்து சொல்வதற்கு முன் தாங்களாகவே மரத்தை வெட்டுவதை நிறுத்தியிருந்தால் சர்ச்சைக்கு இடமிருந்திருக்காது. இதனிடையே வரும் 28ஆம் தேதி திருச்சிக்கு வருகை தரும் எடப்பாடி பழனிசாமியை வரவேற்க பிரம்மாண்ட கூட்டத்தை கூட்டும் பணிகளை அவரது ஆதரவு மாவட்டச் செயலாளர் ப.குமார் கவனித்து வருகிறார்.












Click it and Unblock the Notifications