எடப்பாடி பழனிச்சாமிக்கு திருப்பம் தருமா திருச்சி.. பரபரக்கும் நகரம்.. குவியும் அதிமுகவினர்!
திருச்சி: திருச்சி மாவட்டம் வரும் எடப்பாடி பழனிசாமியை வரவேற்க பெருமளவில் கூட்டத்தை திரட்ட அதிமுகவினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்ந்து உச்சத்திலேயே இருக்கிறது. மூன்று மாதங்களாக ஓபிஎஸ் - இபிஎஸ் தரப்பில் உட்கட்சி மோதல் தொடர்ந்து வருகிறது. இதனால் ரத்தத்தின் ரத்தங்களான அதிமுகவினர், யாரை ஆதரிப்பது என்று தெரியாமல் முழித்து வருகின்றனர். சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பின் ஓபிஎஸ்-ன் கைகள் ஓங்கியுள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பு எவ்வித சலனமும் இல்லாமல் இருக்கிறது.
முதலிடம்.. உலகில் செல்வாக்கு மிக்க தலைவராக பிரதமர் மோடி மாறியது எப்படி? பின்னணி இதுதான்
அதுமட்டுமல்லாமல் ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் இருந்து எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் டிடிவி தினகரன், சசிகலா ஆகியோருடனும் ஓபிஎஸ் தரப்பில் பேசப்பட்டு வருகிறது. இதனால் நாளுக்கு நாள் ஓபிஎஸ்-ன் பலம் அதிகரித்து வருவதாக அரசியல் வட்டாரத்தில் பார்க்கப்படுகிறது.
திருச்சி செல்லும் இபிஎஸ்
இதனிடையே ஓபிஎஸ் தரப்பு ஆதரவாளர்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் ஒற்றைத் தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ்-க்கு ஆதரவான நீதிமன்ற தீர்ப்பு வெளியான பின், முதல்முறையாக எடப்பாடி பழனிசாமி நாளை திருச்சி வருகிறார். முன்னதாக திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு வந்தாலும், நீதிமன்ற தீர்ப்பால் தாமதம் ஏற்பட்டது.
திருச்சியில் முகாமிட்ட தங்கமணி
அதற்காக ஒன்றிய, கிளைக் கழக செயலாளர்களையெல்லாம் நேரில் சந்தித்து அதிமுக தரப்பு அழைப்பு விடுத்திருக்கிறது. அதேபோல் அப்பகுதி மாவட்ட செயலாளர்கள் எடப்பாடி பழனிசாமியை வரவேற்க தடபுடலாக ஏற்பாடுகளை செய்துவருகிறார்கள். இதற்காகவே முன்னாள் அமைச்சர் தங்கமணி திருச்சியில் முகாமிட்டுள்ளார்.
திருச்சியில் யாருக்கு ஆதரவு?
ஒவ்வொரு நாளும் மாவட்ட செயலாளர்களையும் சந்தித்தும் தொடர்பு கொண்டு ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். எடப்பாடி பழனிசாமிக்கு எப்போதும் இல்லாத அளவுக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கவேண்டும் என பார்த்து பார்த்து அதிமுக தரப்பு வேலை செய்து வருகிறது. இதற்கு திருச்சியை தலைமையிடமாகக் கொண்ட மத்திய மண்டலம் ஓபிஎஸ்-க்கு ஆதரவாக இருப்பதாக பார்க்கப்படுகிறது.
பரபரப்பில் தங்கமணி
வெல்லமண்டி நடராஜன் மற்றும் வைத்திலிங்கம் ஆகியோரின் கட்டுப்பாட்டில் திருச்சி, அரியலூர், தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர்கள் இருப்பது போன்ற நிலை தோற்றம் உள்ளது. இதனை எடப்பாடி பழனிசாமியின் வருகையை வைத்து நொறுக்கிட வேண்டும் என்று தங்கமணி தரப்பில் பரபரப்பாக வேலை செய்கிறது.
சிவபதி இல்லத் திருமண விழா
அதேவேளையில் நாளை நடைபெற உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் என்.ஆர் சிவபதியின் இல்லத் திருமண விழாவில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ள உள்ளார். இதன் காரணமாக திருச்சி மாவட்டத்தில் உள்ள அதிமுகவினர், திருமண விழாவில் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும் என்று அழைப்பும் விடுக்கப்பட்டுள்ளது.
2011 கூட்டம் நினைவிருக்கிறதா?
அதேபோல் 2011ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் பிரச்சார கூட்டத்திற்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா திருச்சிக்கு வந்தார். அப்போது திருச்சி ஜி கார்னா் மைதானத்தில் ஏற்பாடு செய்திருந்த பிரச்சார கூட்டம் பெருமளவில் பேசப்பட்டது. அதுபோல் நாளை நடைபெறவிருக்கும் எடப்பாடி நிகழ்ச்சியையும் பெருமளவில் பேசு பொருளாக்க வேண்டும் என அதிமுகவினர் திட்டமிட்டு வேலை செய்து வருகின்றனர். இதன்மூலம் அதிமுகவில் தொண்டர்களின் நம்பிக்கையைப் பெற்ற தலைவர் என்று நிரூபிக்கவும் திட்டமிடுவதாக பார்க்கப்படுகிறது.