என்னா பண்றது.. எங்க தலையெழுத்துன்னு பேசாம இருந்தோம்! வசூல் ரகசியத்தை கக்கிய திண்டுக்கல் சீனிவாசன்!
திருச்சி: கடந்த அதிமுக ஆட்சிக்காலங்களில், மாதம் 5 ஆகிவிட்டால் போதும் என்ன இன்னும் வசூல் வரவில்லையே என அமைச்சர்களை சசிகலா குடும்பத்தினர் தொந்தரவு செய்வார்கள் என்றும் ஒவ்வொரு அமைச்சரும் செத்து செத்து பிழைத்தார்கள் எனவும் அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
வசூல் வரவில்லையே என்று அங்கேயிருந்து ஒருத்தன் பேசுவான், இங்கேயிருந்து ஒருத்தன் பேசுவான் என்றும் அமைச்சர்கள் எல்லோரும் நொந்து போய் என்னா பண்றது, எங்க தலையெழுத்துன்னு பேசாம இருந்தோம் எனவும் திண்டுக்கல் சீனிவாசன் கூறியிருக்கிறார்.

அமைச்சர் பதவியை பிடுங்கிவிடுவார்கள் என்ற அச்சத்தில் சசிகலா குடும்பத்தினருக்கு பணத்தை கட்டு போட்டு தனியாக வைக்க வேண்டிய கொடுமை நிகழ்ந்ததாக தெரிவித்துள்ளார். ஆரம்பக்காலத்தில் சசிகலாவுக்கு பின்னால் தினகரனும் திவாகரனும் பாடிகார்டு போல் நின்றுகொண்டு தண்ணீர் எடுத்துக் கொடுப்பது உள்ளிட்ட வேலைகளை செய்து வந்தார்கள் எனவும் விமர்சித்தார்.
ஓ.பன்னீர்செல்வம் விபத்தினால் முதலமைச்சர் ஆனவர் என்றும் தினகரனால் முதலமைச்சராகிவிட்டு அவருக்கு முதலில் நன்றியுடன் நடந்துகொண்டாரா ஓ.பன்னீர்செல்வம் என திண்டுக்கல் சீனிவாசன் கேள்வி எழுப்பினார். ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி அரசியல் செய்தவர் ஓ.பன்னீர்செல்வம் என்றும் இப்போது அதிமுகவிலிருந்து வீசி எறியப்பட்ட தூசி தான் அவர் எனவும் திண்டுக்கல் சீனிவாசன் வறுத்தெடுத்தார்.

ஓ.பன்னீர்செல்வத்தை நம்பி இன்னும் யாரும் ஏமாற வேண்டாம் என்றும் அவர் நன்றி மறந்தவர் என்பதை யாரும் மறக்கக் கூடாது எனவும் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார். சலவை சட்டையை போட்டுக்கொண்டு தினகரனை நம்பி அரசியல் செய்பவர்களை பார்த்தால் தனக்கு பாவமாக இருக்கிறது என கிண்டல் அடித்தார் திண்டுக்கல் சீனிவாசன்.மதுரை அதிமுக மாநாடு குறித்து திருச்சியில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய போது திண்டுக்கல் சீனிவாசன் இதனைத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications