பேனர் -போஸ்டர் கலாச்சாரம் வேண்டாம்... நிர்வாகிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவுறுத்தல்..!
திருச்சி: போஸ்டர்-பேனர் கலாச்சாரத்தை பின்பற்ற வேண்டாம் என திருச்சி மாவட்ட திமுக நிர்வாகிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவுறுத்தியுள்ளார்.
பேனர்களை மக்களுக்கு இடையூறாக வைக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி நீதிமன்றத்தை நாடியதே திமுக தான் என்பதை நிர்வாகிகள் மறந்துவிடக்கூடாது எனக் கூறியுள்ளார்.
திருச்சி தெற்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் இதனை கண்டிப்புடன் கடைபிடிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அரசியல் கட்சியினர்
அரசியல்வாதிகள் உள்ளூர்களில் தங்களை பப்ளிசிட்டி செய்து கொள்வதற்காக கட்சித் தலைவர்களின் படங்களை போட்டு பேனர் வைப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். தலைவர்களின் வருகை, பிறந்தநாள், நலத்திட்ட விழா, என பல்வேறு காரணங்களுக்காக அரசியல்வாதிகள் வைக்கும் பேனர்களால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

பேனர் சரிந்து
ஓராண்டுக்கு முன்பாக கோவை, சென்னை என இரண்டு இடங்களில் அதிமுக சார்பில் வைக்கப்பட்டிருந்த பேனர் சரிந்து விழுந்து இரண்டு இளம் உயிர்கள் பறிபோனது. இந்த நிகழ்வு தமிழகம் தழுவிய அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து திமுக, பாமக, அமமுக, என அனைத்து அரசியல் கட்சி தலைமையும் பேனர் கலாச்சாரத்தை கைவிடுமாறு தங்கள் தொண்டர்களுக்கு அறிவுறுத்தியது.

நடவடிக்கை
ஆனாலும், பெரும்பாலான இடங்களில் அதனை கேட்பதாக தெரியவில்லை. ஆர்வக்கோளாறில் பேனர் வைக்கும் வழக்கத்தை அரசியல்வாதிகள் பின்பற்றித் தான் வருகின்றனர். இதனிடையே கடந்த மாதம் திமுக தலைமைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பில், பேனர்-போஸ்டர் கலாச்சாரத்தை கைவிட வேண்டும் என்றும், மீறி பேனர் வைக்கும் நிகழ்வில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை பாயும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

போஸ்டர்கள்
இந்நிலையில் நேற்று கருணாநிதி நினைவுத்தினத்தை ஒட்டி தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் உடன்பிறப்புகள் போட்டி போட்டு போஸ்டர்கள் ஒட்டியிருந்தனர். முதலமைச்சர் ஸ்டாலின் காட்டிய கண்டிப்பு காரணமாக பேனர் ஓரளவு குறைந்திருந்தது. இதனிடையே திருச்சி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியிடம் பேனர்-போஸ்டர் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அறிவுறுத்தல்
அதற்கு பதிலளித்த அவர், பேனர் வைப்பதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்ததே திமுக தான் என்றும் அதனால் வெற்று விளம்பரங்களை தவிர்க்க வேண்டும் என்பதே தங்கள் நிலைப்பாடு எனவும் தெரிவித்தார். பேனர் விவகாரத்தில் தலைமையின் ஆணையை முழுமையாக ஏற்று நடந்துகொள்ள வேண்டும் என திமுக நிர்வாகிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.

நினைவேந்தல்
முன்னதாக திமுக திருச்சி தெற்கு மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவேந்தல் கூட்டத்தில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்துகொண்டார். அப்போது ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.












Click it and Unblock the Notifications