Exclusive: தொகுதி மக்கள் தான் எனது குடும்பம்... அன்பில் மகேஷ் பொய்யாமொழி 'பளிச்' பேட்டி
திருச்சி: இன்று மாலையுடன் பிரச்சாரம் நிறைவடைய உள்ள நிலையில் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதியில் இறுதிக்கட்ட பரப்புரையில் தீவிரமாக இருந்த அன்பில் மகேஷ் பொய்யாமொழியை அவரது இல்லத்தில் நேற்றிரவு சந்தித்தோம்.
பிரச்சார களைப்புடன் இருந்தபோதிலும் நேர்காணலுக்காக நேரம் ஒதுக்கி நம்மிடம் பேசினார்.
அதன் விவரம் பின்வருமாறு;

கேள்வி: பிரச்சாரம் இன்று இரவுடன் நிறைவடைகிறது, திருவெறும்பூர் தொகுதி பரப்புரை அனுபவம் பற்றி கூறுங்கள்...
பதில்: கடந்த 5 ஆண்டுகளாக எதிர்க்கட்சி எம்.எல்.ஏ. என்ற ஒரே காரணத்துக்காக எனது மக்கள் பணிகளுக்கு அதிமுக அரசு எண்ணற்ற முட்டுக்கட்டைகளை போட்டது. இதனை மக்கள் மத்தியில் இப்போது எடுத்துக் கூறியிருக்கிறேன். அவர்களும் யதார்த்தத்தை உணர்ந்துகொண்டார்கள். நான் வாக்குக் கேட்டு சென்ற இடங்களில் எல்லாம் இளைஞர்களும், தாய்மார்களும், என்னை வாழ்த்தி அனுப்பினார்கள். அதிமுக அரசு மீது மக்களுக்கு சலிப்பு மட்டும் ஏற்படவில்லை, கூடவே வெறுப்பும் ஏற்பட்டிருப்பதை இந்த பிரச்சாரக் களத்தில் உணர முடிந்தது.
கேள்வி: நீங்க ஒரு எம்.எல்.ஏ. -உங்களுக்கு எப்படி அரசு முட்டுக்கட்டை போட முடியும்..?
பதில்: தமிழகம் முழுவதும் திமுக எம்.எல்.ஏ.க்கள் தொகுதி மக்களிடம் நல்ல பெயர் வாங்கிவிடக் கூடாது என்பதில் கடந்த 5 ஆண்டுகளாக இந்த ஆட்சியாளர்கள் கவனமாக இருந்தனர். எனது தொகுதி மக்களுக்காக நான் அளித்த கோரிக்கை மனுக்கள், புகார்களை எல்லாம் இங்குள்ள ஒரு சில அதிகாரிகள் மிக அலட்சியமாக கையாண்டனர். என்னை எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினராக பார்க்காமல் ஏதோ எதிரிகட்சி சட்டமன்ற உறுப்பினராக பார்த்தார்கள். இதற்கெல்லாம் நல்ல தீர்வு ஏற்படும் வகையில் எங்கள் தலைவர் தலைமையில் ஆட்சி அமைந்தவுடன் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. என்ற முறையில் இன்னும் சிறப்பாக செயல்பட்டு திருவெறும்பூரை நோக்கி அனைவரையும் திரும்பிப் பார்க்க வைப்பேன்.

கேள்வி: உங்களுக்கு எதிராக உங்கள் கட்சியை சேர்ந்த சிலரே உள்ளடி வேலைகள் பார்ப்பதாக கூறப்படுகிறதே..?
பதில்: அப்படியேதும் எனக்குத் தெரியவில்லை, என்னை பொறுத்தவரை நான் யாரையும் எதிரியாக பார்ப்பது கிடையாது. மாவட்டப் பொறுப்பாளராக பதவியேற்றது நாள் முதல், யார் மீதும் விருப்பு வெறுப்பின்றி தான் செயல்பட்டு வருகிறேன். நீங்கள் கேட்டது போல், யாரேனும் ஒரு சிலர் என்னை பற்றி தவறான புரிதலோடு இருக்கலாம். அவர்களுக்கு எல்லாம் இந்த தருணத்தில் கூற விரும்புவது, தனிப்பட்ட கோபதாபங்களை ஒதுக்கி வைத்துவிட்டு தலைவர் ஸ்டாலினின் உழைப்பையும், அவர் சிந்தும் வியர்வையையும் சிந்தித்துப் பாருங்கள் என்பது தான்.
கேள்வி: தொகுதி பணிகளுக்கு மத்தியில் குடும்பத்தினரோடு நேரம் செலவழிக்க முடிந்ததா..?
பதில்: தொகுதி மக்கள் தான் எனக்கு குடும்பம், அதனால் அவர்களை நான் தனியாக பிரித்துப் பார்ப்பதில்லை. குடும்பத்தினரோடு இருக்கும் போது என்ன மன நிறைவு இருக்குமோ, அதைவிட 100 மடங்கு மன நிறைவு திருவெறும்பூர் தொகுதி மக்களின் சுக துக்க நிகழ்வுகளில் பங்கேற்கும் போது எனக்கு கிடைக்கிறது. வெறும் வாக்காளர்களாக மட்டும் என் தொகுதி மக்களை நான் பார்க்கவில்லை. அவர்களை என் உணர்வுடன் கலந்த உற்ற நண்பர்களாக, சகோதரர்களாக, சகோதரிகளாக, தாய்மார்களாக, தம்பிமார்களாக, இன்னும் சொல்லப்போனால் என் குடும்ப உறுப்பினர்களில் ஒருவராகவே தொகுதி மக்கள் ஒவ்வொருவரையும் நான் பார்க்கிறேன்.
கேள்வி: எந்த நம்பிக்கையில் திமுக ஆட்சி அமைக்கும் எனக் கூறுகிறீர்கள்..?
பதில்: தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பு பறிபோவதில் தொடங்கி விவசாயிகள், சிறுபான்மையின மக்கள், ஒடுக்கப்பட்டோர் என அனைத்து தரப்பட்டோருக்குமான உரிமைக் குரலாக தமிழகத்தில் தலைவர் ஸ்டாலின் குரல் ஒலிக்கிறது. மக்கள் தங்களுக்கான உரிமைக் குரலை தான் எதிர்பார்க்கிறார்களே தவிர, அடிமைக் குரலை அல்ல.












Click it and Unblock the Notifications