அண்ணாமலைக்கு தெரியல! திருவாரூர் தெற்கு ரத வீதிக்கு கருணாநிதி பெயர் வைப்பது நிறுத்தம்! -கேஎன் நேரு
திருச்சி: ‛‛திருவாரூர் தெற்குரத வீதிக்கு கருணாநிதி பெயர் வைக்கும் நகராட்சி தீர்மானத்தை நிறுத்தி வைக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தெரியாமல் பாஜக தலைவர் அண்ணாமலை அரசியல் செய்கிறார்'' என திருச்சியில் அமைச்சர் கே என் நேரு கடுமையாக விமர்சனம் செய்தார்.
திருச்சி அரிஸ்டோ ரவுண்டானா மேம்பால பணிகள் கடந்த 8 ஆண்டுகளாக மத்திய பாதுகாப்பு துறைக்கு சொந்தமான 66 சென்ட் நிலம் பெறமுடியாமல் பெண்டிங் இருந்தது.
தற்போது பாதுகாப்புத்துறை நிலம் வழங்கியுள்ளது. இதையடுத்து பாலத்து பணிகள் துவங்கியுள்ளது. இந்த பணிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கேஎன் நேரு துவக்கி வைத்து ஆய்வு செய்தார். இதையடுத்து அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
“உங்களுக்கு ஒண்ணு தெரியுமா.. சொத்து வரியை உயர்த்துனதே இதுக்குத்தான்”- ஒரே போடாக போட்ட அமைச்சர் நேரு!
போக்குவரத்து கட்டணம் உயர்வு
எங்களுடைய முயற்சியால் பல ஆண்டுகளாக முடிவு பெறாமல் இருந்த அரிஸ்டோ மேம்பால பணி இன்று துவங்கியது. இப்பணிகள் இன்னும் 3 மாதத்தில் முடிவு பெறும். பேருந்து கட்டணம் உயர்வு குறித்து தமிழக முதல்வர் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் முடிவு செய்து உங்களிடம் அறிவிப்பார்கள்.
ஆண்டுதோறும் வரி உயர்வு
சென்னையில் வரி உயர்த்தி 22ஆண்டுகள் ஆகின்றன. பிற இடங்களில் 13 ஆண்டுகள் ஆகின்றன. 1998ல் நாங்கள் இயற்றிய சட்டத்தை கிடப்பில் போட்டு விட்டனர். ஆனால், அந்த சட்டத்தை ஆந்திரா எடுத்து சென்று அமல்படுத்திவிட்டது. அதன்பிறகு, 2008ம் ஆண்டு இயற்றிய சட்டத்தை அதிமுக தேர்தலுக்காக கிடப்பில் போட்டுவிட்டனர். ஒட்டுமொத்தமாக 10 ஆண்டுகளுக்கான வரியை உயர்த்தினால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவர் என்பதால் ஆண்டுக்கொரு முறை வரி உயர்வை அமல்படுத்தியுள்ளோம். ஆண்டுதோறும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அகவிலைப்படி உயர்வு பெறுகின்றனர். மக்களுக்கு நன்மை செய்யவே இந்த சட்டத்தை இயற்றியுள்ளோம். ஆண்டுதோறும் வரி உயர்வு என்பது மக்கள் பணத்தை அரசு எடுத்துச் செல்வதற்காக இல்லை. நகர்ப்புற அமைப்புகள் நிதிவளம் பெற்று, தன்னிச்சையாக செயல்பட இந்த சட்டம் உதவும்
அண்ணாமலைக்கு தெரியவில்லை
திருவாரூர் தெற்கு ரத வீதிக்கு கருணாநிதி பெயர் வைக்கும் நகராட்சி தீர்மானத்தை நிறுத்தி வைக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுக்கூட தெரியாமல் பாஜக தலைவர் அண்ணாமலை அரசியல் செய்கிறார். அவர் கூறியபடி அரசு அதிகாரிகளை தடுத்தால் அவர் மீது வழக்குப் பாயும்.
விமான நிலைய விரிவாக்கம்
திருச்சி விமான நிலையம் என்பது நாட்டிலேயே சிறந்த சிறு விமான நிலையங்களில் அதிக லாபம் ஈட்டக்கூடியதாக இருக்கிறது. எனவே, தனியார் நிறுவனம் இந்த விமான நிலையத்தை வாங்கிவிட்டனர். திருச்சி விமான நிலைய விரிவாக்கத்திற்காக எங்களிடம் இருக்கும் இடத்தை கொடுக்க தயாராக இருக்கிறோம். மத்திய பாதுகாப்புத் துறைக்கு சொந்தமான இடம் வேண்டுமானால், அதை அந்த தனியாரே கேட்டு வாங்கிக் கொள்வார்கள்'' என்றார்.