அரியலூர் மாணவி வழக்கு.. பெயிலில் வந்த வார்டனுக்கு சால்வை போட்டு வரவேற்ற திமுக எம்எல்ஏ.. பரபரப்பு!
திருச்சி: அரியலூர் மாணவி வழக்கில் கைதாகி விடுதலை செய்யப்பட்ட வார்டன் சகாய மேரியை திமுக எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் வரவேற்ற சம்பவம் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சை பள்ளியில் படித்து வந்த அரியலூர் மாணவி ஹாஸ்டல் வார்டன் கொடுத்த தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ஹாஸ்டல் வளாகத்தை சுத்தம் செய்ய சொல்லி ஹாஸ்டல் வார்டன் சகாய மேரி தொல்லை கொடுத்ததால் அந்த மாணவி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
ஆனால் இதற்கு மத மாற்ற அழுத்தம்தான் காரணம் என்று பாஜக மற்றும் இந்துத்துவா அமைப்புகள் புகார் அளித்து வருகின்றனர். இன்னொரு பக்கம் மாணவியை மத மாற்றம் செய்ய பள்ளி நிர்வாகம் வற்புறுத்தியது.

தற்கொலை
அதனால்தான் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று புகார் வைக்கப்பட்டுள்ளது. அதே சமயம் மாணவிக்கு வேலை கொடுத்து தொல்லை தந்ததாக சகாய மேரி கைது செய்யப்பட்டுவிட்டார். திருச்சியில் இருக்கும் மத்திய பெண்கள் சிறையில் இவர் அடைக்கப்பட்டார். இது ஒரு புறம் இருக்க இன்னொரு பக்கம் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி மதுரை ஹைகோர்ட் கிளை கடந்த சில நாட்களுக்கு முன் உத்தரவு பிறப்பித்தது.இந்த வழக்கை மதுரை ஹைகோர்ட் கிளை நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டார்

அரியலூர் மாணவி
இந்த நிலையில் நேற்று அரியலூர் மாணவி வழக்கில் கைதான சகாய மேரி ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். திருச்சி பெண்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்த இவர் நேற்று சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். இதையடுத்து திருச்சி கிழக்கு தொகுதி திமுக எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் அவரை நேரில் சென்று சந்தித்தார். சிறை வாசலில் சகாய மேரியை அவர் வரவேற்றார். அதோடு சகாய மேரிக்கு திமுக எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் சால்வை போட்டு வரவேற்றதும் குறிப்பிடத்தக்கது.

இனிகோ இருதயராஜ்
திருச்சி கிழக்கு தொகுதி திமுக எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் செய்துள்ள பேஸ்புக் போஸ்ட்டில், தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி மைக்கேல்பட்டியில், 62 வயதிலும் கிராமப்புற ஏழைக் குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்காக தன்னையே அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் தூய இருதய மேல்நிலைப் பள்ளி விடுதி காப்பாளர் அருட்சகோதரி சகாயமேரி அவர்கள், அந்தப் பள்ளியில் நடைபெற்ற எதிர்பாராத சம்பவத்தை அடுத்து கைது செய்யப்பட்டார்.

வழக்கு
ஏதேனும் வழக்கு என்றாலே மருத்துவமனையில் சேர்ந்து கொள்பவர்களுக்கு மத்தியில் நீதியின் மேல் நம்பிக்கை வைத்து சட்டப்படி வழக்கை எதிர்கொள்வேன் என்ற உறுதியோடும், நேர்மையோடும் வழக்கை எதிர்கொண்ட நிலையில் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டதை அறிந்து, திருச்சி பெண்கள் மத்திய சிறைக்கு நேரில் சென்று அவரை வரவேற்று நலம் விசாரித்து ஆறுதல் கூறினேன். நீதி வெல்லும். மத நல்லிணக்கம் காக்கும் முயற்சியில் தொடர்ந்து பணியாற்றுவோம் என்று தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

எதிர்ப்பு
இந்த நிலையில் பாஜகவினர் பலர் இந்த போட்டோவை ஷேர் செய்து விமர்சனம் செய்து வருகின்றனர். திமுக எம்எல்ஏ ஒருவர் இந்த வழக்கில் கைதான வார்டனை சென்று சந்திப்பது தவறு. இது வழக்கு விசாரணையில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று பாஜகவினர் விமர்சனம் செய்து வருகின்றனர். அரியலூர் மாணவி வழக்கை சிபிஐக்கு மாற்றியதற்கு தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் இதற்கு எதிரான மேல்முறையீடு விசாரணை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications