கலாய்க்கிறதுக்கு லிமிட் இல்லையா... நடிகர் சந்தானத்திற்கு எதிராக பிராமணர் சங்கம் போலீசில் புகார்
திருச்சி: நடிகர் சந்தானம் நடித்துள்ள படத்தின் டீசரில் பிராமண சமுதாயத்தை இழிவுபடுத்தும் காட்சிகள் இருப்பதாகவும், எனவே நடிகர் சந்தானம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு பிராமணர் சங்கம் உள்ளிட்ட அமைப்பினர் காவல் துறையிடம் புகார் அளித்துள்ளனர்.
'தில்லுக்கு துட்டு 2'. படத்தைத் தொடர்ந்து நடிகர் சந்தானம் ஜான்சன் இயக்கத்தில் அக்யூஸ்ட் நம்பர் 1(A1) என்ற படத்தில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக தாரா அலிஷா நடிக்கிறார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த மார்ச் மாதத்தில் வெளியானது.
சந்தோஷ் நாராயணன் இசையில், ராஜ் நாராயணன் தயாரிக்கும் இந்தப் படம் கோடை விடுமுறைக்கு திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திரைப்படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியிடப்பட்ட நிலையில், பிராமண சமுதாயத்தை இழிவுபடுத்தும் வகையில், வசனங்கள் இடம் பெற்றுள்ளதாக கூறி படத்திற்கு எதிர்ப்பு அலைகள் எழுந்துள்ளன.
இந்தநிலையில், நடிகர் சந்தானம் உள்ளிட்ட படக்குழுவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு பிராமணர் சங்கம் மற்றும் இந்து தமிழர் கட்சி சார்பில் பழனி காவல் துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அதே போல், நடிகர் சந்தானம் நடிப்பில் வெளிவரவுள்ள அக்யூஸ்ட் நம்பர் 1 திரைப்படத்தை தடை செய்ய கோரி திருச்சி மாநகர காவல் ஆணையரிடம் இந்து தமிழர் கட்சியினர் புகார் மனு அளித்துள்ளனர்.