வேங்கைவயல் விவகாரம்.. 8 பேரை சந்தேகித்து விசாரிக்கும் சிபிசிஐடி.. இறுகும் இறுதி கட்ட விசாரணை!
வேங்கைவயல் விவகாரத்தில் 8 பேர் மீது சந்தேகம் இருப்பதாக சிபிசிஐடி தரப்பில் கூறப்பட்டுள்ளது.
திருச்சி: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீரில் மலம் கலந்த வழக்கில், 8 பேர் மீது சந்தேகம் இருப்பதாகவும், அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக சிபிசிஐடி காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிபிசிஐடி விசாரணையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் முத்துக்காடு ஊராட்சியில் இறையூர் கிராமத்தில் உள்ள ஒரு பகுதியில் 50க்கும் மேற்பட்ட பட்டியல் அனைத்து மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு வந்த பகுதியில் ஒரு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி வைத்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
டிசம்பர் மாத இறுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் துர்நாற்றத்துடன் குடிநீர் வந்ததை அறிந்த பொதுமக்கள், தொட்டியின் மேலே சென்று ஆய்வு மேற்கொண்ட போது அதில் மர்ம நபர்கள் மலம் கலந்திருப்பது தெரிய வந்தது.

சிபிசிஐடி விசாரணை
இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், குற்றவாளிகளை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. பின்னர் வேங்கைவயல் வழக்கு விசாரணை சிபிசிஐடி தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டது. இருப்பினும் இதுவரை குடிநீரில் மலம் கலந்த குற்றவாளிகளை யார் என்பது கண்டறியப்படவில்லை. சிபிசிஐடி காவல்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

8 பேர் மீது சந்தேகம்
தொடர்ந்து, டிஎஸ்பி பால்பாண்டி தலைமையிலான சிபிசிஐடி காவல்துறையினர் பல்வேறு குழுக்களாக பிரிந்து சென்று வேங்கைவயல் பகுதியைச் சேர்ந்த 92 பேரிடம் விசாரணை செய்தனர். இதில் சந்தேகம் உள்ள சிலரை மட்டும் திருச்சியில் உள்ள சிபிசிஐடி டிஎஸ்பி அலுவலகத்துக்கு நேரில் வரவழைத்து விசாரித்து வருகின்றனர். அதன்படி, திருச்சி சிபிசிஐடி டிஎஸ்பி அலுவலகத்தில் நேற்று 8 பேர் ஆஜராகினர். அவர்களிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

மாதிரிகள் ஆய்வு
இதுகுறித்து சிபிசிஐடி காவல்துறையினர் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக விசாரணையில் கிடைத்த தகவல்களை அறிவியல் தொழில்நுட்பத்துடன் தொடர்புபடுத்தி ஆதாரங்களைத் திரட்டி வருகிறோம். கைப்பற்றப்பட்ட மாதிரிகளை ஆய்வகத்துக்கு உட்படுத்தி உள்ளோம்.

விரைவில் முடிவு
அதுதொடர்புடைய தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆய்வு செய்துள்ளனர். ஏற்கெனவே, விசாரணைக்கு உட்படுத்தியவர்களில் சந்தேகம் உள்ளவர்களிடம் திருச்சிக்கு வரவழைத்து விசாரணை நடத்தி வருகிறோம். அதில் 8 பேர் ஆஜராகினர். இந்த வழக்கின் விசாரணையில் முன்னேற்றம் உள்ளது. விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications