அரசு பள்ளி மாணவர்கள் இடையே மோதல்.. தடுக்க முயன்ற ஆசிரியருக்கு அரிவாள் வெட்டு! அதிர்ந்த திருச்சி
திருச்சி: திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள அரசு உதவி பெறும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு மாணவர் ஒருவர், தன்னுடன் படித்து வரும் சக மாணவர் மற்றும் தனக்கு பாடம் சொல்லி கொடுக்கும் ஆசிரியரை கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே அரசு உதவி பெறும் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் பள்ளியில் படிக்கும் சக மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் வகுப்பு ஆசிரியருக்கு கத்திக்குத்து ஏற்பட்டது. இதில் படுகாயமடைந்த ஆசிரியர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பற்றி விவரம் வருமாறு:-

ஸ்ரீரங்கம் அருகே உள்ள அரசு உதவி பெறும் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அவ்வப்போது மாணவர்கள் இடையே சின்னச்சின்ன மோதல்கள் ஏற்படும் என்று கூறப்படுகிறது. இதில், குறிப்பாக பன்னிரண்டாம் வகுப்பில் அறிவியில் படிக்கும் மாணவன், ஆசிரியர்கள் யாரையும் மதிக்காமல் அடாவடி செய்து வந்ததாக கூறப்படுகிறது.
மேலும் சக மாணவர்களிடமும் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இது தொடர்பாக தான் அந்த மாணவரிடம் பள்ளி நிர்வாகம் மன்னிப்பு கடிதம் கேட்டிருந்தது. இதையடுத்து அந்த மாணவர் கடந்த 10 நாட்களாக பள்ளிக்கு வராமல் இருந்துள்ளார். இந்த நிலையில் இன்று காலை பள்ளிக்கு வந்த அந்த மாணவன், மதியம் வரை வகுப்பில் இருந்து பாடங்களை கவனித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் மதிய இடைவேளைக்கு பிறகு மாணவர் வகுப்புக்கு வரவில்லை. மதியத்திற்கு பின் 2 வகுப்புகள் முடிந்த பிறகு வகுப்பறைக்கு வந்த அந்த மாணவன் சக மாணவரோடு தகராறு செய்தார். இதில் அவர்கள் இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. வகுப்பறைக்குள் இந்த மோதல் நடந்ததால் சக மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதற்கிடையே தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அந்த மாணவரை குத்தியுள்ளார்.
இதனால் அதிச்சியடைந்த ஆசிரியர் இந்த மோதலை தடுக்க முயன்றார். இதில் ஆசிரியரையும் அந்த மாணவர் கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். இதையடுத்து கத்திக்குத்தில் படுகாயமடைந்த ஆசிரியர் மற்றும் மாணவரை சக ஆசிரியர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் சம்பவம் பற்றி அறிந்த போலீசார் பள்ளி வகுப்பறைக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் ஆசிரியரையும், சக மாணவரையும் கத்தியால் குத்திவிட்டு சென்ற மாணவனை பிடிக்க விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்விரோதம் காரணமாக பள்ளி மாணவர் மீது அந்த மாணவர் தாக்குதல் நடத்தியிருக்கலாம் என்று போலீசார் முதற்கட்ட விசாரணையில் தெரிவித்தனர். பள்ளி வகுப்பறைக்குள் வைத்து ஆசிரியரை மாணவர் கத்தியால் குத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications