ஐ ஆம் சாரி ஐயப்பாவா? பா.ரஞ்சித், இசைவாணியை புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்! பரபர புகார் கொடுத்த பாஜக!
திருச்சி: லட்சக்கணக்கான பக்தர்கள் வழிபடும் சபரிமலை ஐயப்பன் குறித்து அவதூறாக பாடல் பாடியதாக இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையத்தைச் சேர்ந்த பாடகியான இசைவாணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருச்சி ஆணையர் அலுவலகத்தில் பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பிரபல யூட்யூபரான 'வணக்கம் டா மாப்ள' தேனி அருண்குமார் மீது தாக்குதல் நடத்திய விடுதலை சிறுத்தை கட்சியினரை கைது செய்ய வேண்டும் எனவும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
உலகப் புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் மகர விளக்கு மற்றும் மண்டல பூஜையை முன்னிட்டு நடை திறக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் திரண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் பிரபல பாடகியான இசைவாணியின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. பிரபல இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மைய இசைக் குழுவான கேஸ்ட்லஸ் கலெக்டிவ் குழுவில் பாடகியாய் இருக்கிறார் இசைவாணி.
இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தான் அவர் பாடிய பாடல் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தற்போது சபரிமலை ஐயப்பனுக்கு பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து வரும் நிலையில் 'ஐ எம் சாரி ஐயப்பா.. நான் உள்ளே வந்தால் என்னப்பா" என இசைவாணி பாடிய பாடல் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பெண்கள் செல்ல தடை உள்ள நிலையில் அது தொடர்பாகவே இசைவாணி பாடிய பாடல் தற்போது ட்ரெண்ட் ஆகி வருகிறது. இதை அடுத்து கோவை சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் இசைவாணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் புகார் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இசைவாணி மீது நடவடிக்கை எடுக்கப்படுமென தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுவும் கூறியிருந்தார்.
அதே நேரத்தில் இசைவாணி 5 ஆண்டுகளுக்கு முன் பாடிய பாடலை வைத்து வேண்டுமென்றே சர்ச்சைகள் கிளப்பப்படுவதாக அவர் தரப்பு கூறுகிறது. மேலும் தனக்கு கொலை மிரட்டல்கள் விடுக்கப்படுவதாக இசைவாணி கூறியிருந்தார். இந்நிலையில், ஐயப்ப பக்தர்களின் மனதை புண்படுத்தியதாக இசைவாணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருச்சி ஆணையர் அலுவலகத்தில் பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பிரபல யூட்யூபரான 'வணக்கம் டா மாப்ள' தேனி அருண்குமார் மீது தாக்குதல் நடத்திய விடுதலை சிறுத்தை கட்சியினரை கைது செய்ய வேண்டும் எனவும் அந்த மனவில் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக பாஜகவின் வெளிநாடு மற்றும் அண்டை மாநிலத் தமிழ் வளர்ச்சி பிரிவு மாநில செயலாளர் ஜெயராம் பாண்டியன் அளித்துள்ள மனுவில்," மார்கழியில் மக்களிசை என்ற நிகழ்வில் பாடிய இசைவாணி நம்பிக்கையுடன் வழிபட்டு வரும் ஐயப்பனை பற்றி நக்கலாக பாடல் பாடியுள்ளார்.
ஐயப்பன் கோவிலுக்கு பெண்கள் செல்லக்கூடாது என்பதை பாரம்பரியம். அதனை கொச்சைப்படுத்தும் விதமாகவும் சாதி போன்ற வார்த்தைகளை சேர்த்து, சாதி வெறியை தூண்டும் விதமாக இசைவாணி பாடி இருக்கிறார். எனவே இசைவாணி மீதும் அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த பா.ரஞ்சித் மற்றும் அவரது குழுவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இதனை தட்டி கேட்டு வீடியோ வெளியிட்ட ஐயப்ப பக்தர் தேனி அருண்குமாரை தாக்கிய விடுதலை சிறுத்தைகள் கட்சியினரையும் கைது செய்ய வேண்டும்" என கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications