மோடி - ஸ்டாலின் நெருக்கம்? பிரதமரோட அழுதுகிட்டா பேச முடியும்? என்னங்க இது.. திருநாவுக்கரசர் சுளீர்!
திருச்சி : பிரதமர் மோடி தமிழ்நாட்டு வருகையின்போது முதல்வர் ஸ்டாலின் மிகுந்த நெருக்கம் பாராட்டியது அரசியல் அரங்கில் விவாதங்களைக் கிளப்பிய நிலையில், "முதல்வர் பிரதமரிடம் சிரித்துத்தான் பேச முடியும், பிறகு அழுதுகொண்டா பேசமுடியும்?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார் காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசர்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், காங்கிரஸ் எம்.பியுமான திருநாவுக்கரசர் திருச்சியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "தமிழ்நாடு ஆளுநர் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அனைத்திற்கும் கையெழுத்திடாமல் உள்ளார். எனவே தமிழ்நாடு முழுவதும் அணி திரண்டு வந்து ஆளுநரை கண்டித்து நாளை சென்னையில் போராட்டம் நடைபெற உள்ளது.

இதையடுத்து ராகுல் காந்தி எம்.பி தகுதி நீக்க நடவடிக்கைக்கு எதிராக பாஜகவை கண்டித்து வருகிற 15ஆம் தேதி மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு இந்தியா முழுவதும் போராட்டம் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டம் மாவட்ட அளவிலும், ஒன்றிய அளவிலும் நடைபெற உள்ளது." எனத் தெரிவித்தார் திருநாவுக்கரசர்.
மேலும் பேசிய அவர், "திமுக - காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது. அதிமுக - பாஜக கூட்டணியில் ஒருத்தரை விட்டா ஒருத்தருக்கு வழி கிடையாது என்கிற நிலைதான் உள்ளது. அதிமுகவை விட்டுவிட்டு பாஜக ரோட்டிலா நிற்கும்? காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க விரும்பாத கட்சிகள் கூட பாஜகவிற்கு எதிர்ப்பு நிலைப்பாடு கொண்டுள்ளன. நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த பிறகு அவர்கள் காங்கிரஸ் கட்சியை ஆதரிப்பார்கள்" எனத் தெரிவித்தார்.
பிரதமர் மோடி தமிழ்நாட்டு வருகையின்போது முதல்வர் ஸ்டாலின், சிரித்தபடி நெருக்கமாக அளவளாவியது பற்றிய கேள்விக்கு பதிலளித்த திருநாவுக்கரசர், "பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வரும்போது, முதல்வர் ஸ்டாலின் மக்களுக்கு வேண்டியதை எடுத்துச் சொல்லி பிரதமரிடம் கேட்டிருக்கிறார். தமிழ்நாட்டு வளர்ச்சிக்கு எது எதெல்லாம் தேவையோ, தன்னை தேர்ந்தெடுத்த மக்களுக்காக அவர் பிரதமரிடம் கோரிக்கை வைத்திருக்கிறார். அவர் பிரதமரிடம் சிரித்துத்தான் பேச முடியும், பிறகு அழுதுகொண்டா பேசமுடியும்?" எனக் கேள்வி எழுப்பினார்.

மேலும், மாநிலங்களுக்கு வருகை தரும் பிரதமரை, முதலமைச்சர் புறக்கணிப்பது புத்திசாலித்தனம் இல்லை. அதற்கு பதிலாக அந்த விழாவில் பங்கேற்று மாநிலங்களுக்கு தேவையான நலத்திட்டங்களை பெற்றுக் கொள்வது தான் புத்திசாலித்தனம். அந்த வகையில் தெலுங்கானா முதலமைச்சர் புறக்கணித்தது அவருடைய விருப்பம் எனத் தெரிவித்தார் திருநாவுக்கரசர்.












Click it and Unblock the Notifications