எம்.ஜி.ஆர் சிலைக்கு காங்கிரஸ் துண்டால் முக்காடு... சிலையை சுத்தபடுத்தி பாலாபிஷேகம் செய்த அமைச்சர்!
திருச்சி: திருச்சியில் நீதிமன்றம் ரவுண்டானா அருகே உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு மர்ம நபர்கள் சிலர் காங்கிரஸ் துண்டால் முக்காடு போட்டனர். இதனை அறிந்த தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் அந்த சிலையை சுத்தம் செய்து, பாலபிஷேகம் செய்தார்.
இந்த செயலை செய்த மர்மநபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உறுதி அளித்தார். எம்.ஜி.ஆர் சிலைக்கு காங்கிரஸ் துண்டு போட்ட சம்பவம் திருச்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருச்சி மாநகரில் நீதிமன்றம் அருகே உள்ள எம்.ஜி.ஆர் சிலையின் தலையில் காங்கிரஸ் கட்சியின் துண்டால் முக்காடு போடப்பட்டு இருந்தது. இதை கண்டு பலர் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் அந்த வழியாக சென்ற பொதுமக்களோ, போலீசாரோ அந்த துண்டை அகற்ற முன்வரவில்லை.அப்போது அந்த வழியாக சென்ற தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி மகன் ஜவஹர்லால் நேரு, வாகனத்தை நிறுத்தி, எம்.ஜி.ஆர் சிலையின் தலையின் மேல் போடப்பட்டிருந்த காங்கிரஸ் துண்டை அகற்றினார்.

பின்னர் இது குறித்து அவர் செஷன்ஸ் நீதிமன்ற காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அங்கு உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.பின்னர் இதுபற்றி தகவல் அறிந்து அங்கு சென்ற அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் காங்கிரஸ் துண்டு போடப்பட்டு இருந்த எம்.ஜி.ஆர் சிலையை தண்ணீரால் சுத்தம் செய்து பாலாபிஷேகம் செய்தார். மேலும், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்பு நிருபர்களிடம் பேட்டியளித்த அமைச்சர், எம்.ஜி.ஆர் சிலை மீது காங்கிரஸ் துண்டு போட்டவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். திருச்சி நகரின் முக்கிய பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு முக்காடு போட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications