தடி எடுத்தவன் தண்டல்காரன்... திருச்சி அதிமுகவில் தலைவிரித்தாடும் கோஷ்டிபூசல்
திருச்சி: திருச்சி மாவட்ட அதிமுகவில் அண்மைக்காலமாக கோஷ்டிப்பூசல் அதிகரித்துள்ளதால் அதனை பஞ்சாயத்து செய்வதற்குள் தலைமைக்கு போதும் போதும் என்றாகிவிடுகிறது.
திருச்சி மாநகர மகளிரணி நிர்வாகி ஒருவர் ஒட்டியுள்ள போஸ்டரில் மாவட்டச் செயலாளர்கள் குமார் மற்றும் ரத்தினவேல் ஆகியோரின் படமும், பெயரும் இல்லாதது பஞ்சாயத்தை கூட்டியுள்ளது.
இதேபோல் மாவட்ட அமைச்சர்களான வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோரின் படங்களும், பெயர்களையும் தவிர்த்து மகளிரணி நிர்வாகி தமிழரசி போஸ்டர் ஒட்டியிருக்கிறார்.
பல அணிகள்
தமிழகத்தில் எங்கு எப்படியோ திருச்சியை பொறுத்தவரை திமுகவிலும், அதிமுகவிலும் பல கோஷ்டிகள் செயல்பட்டு வருகின்றன. அதிமுகவில் முன்னாள் அமைச்சர் சிவபதி, பரஞ்சோதி, அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், அமைச்சர் வளர்மதி, முன்னாள் எம்.பி.குமார், சிட்டிங் மாவட்டச் செயலாளர் ரத்தினவேல், சர்ச்சை புகழ் பரமேஸ்வரி முருகன் எம்.எல்.ஏ. என ஆளுக்கு ஒரு கோஷ்டி அமைத்து திருச்சியில் செயல்பட்டு வருகின்றனர். இந்த லிஸ்டில் புதிதாக இணைந்திருக்கிறார் ஆவின் சேர்மன் கார்த்திகேயன்.
விசாரணை
அண்மையில் சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே திருச்சி மாவட்ட மண்ணச்சநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ.வான பரமேஸ்வரி முருகனை அதிமுக ஒன்றியச் செயலாளர் ஒருவரே கன்னத்தில் பளார் விட்ட சம்பவம் அதிமுகவின் மரியாதையையும், கட்டுப்பாட்டையும் கப்பலேற்றியது. இதையடுத்து அந்த விவகாரத்தில் அமைச்சர் தங்கமணி தலையிட்டு இரண்டு தரப்பையும் அழைத்து விசாரணை செய்து பஞ்சாயத்து செய்து வைத்தார்.
தலைவலி
இந்நிலையில் ஆவின் சேர்மனாக கார்த்திகேயன் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு நன்றி தெரிவித்து மகளிரணி நிர்வாகி தமிழரசியும், அவரது கணவர் சுப்பையாவும் திருச்சியில் ஒட்டியுள்ள போஸ்டர் திருச்சி அதிமுகவில் அனலை கிளப்பியுள்ளது. மாவட்டச் செயலாளர் ரத்னவேல், மாநகரச் செயலாளர் குமார் ஆகியோரின் பெயரை தவிர்த்து போஸ்டர் ஒட்டியது ஏன் என தலைமை வரை புகார் சென்றிருக்கிறது. மேலும், திருச்சி மாவட்டத்தில் ஒன்றுக்கு இரண்டு அமைச்சர்கள் இருக்கிறார்கள். அப்படி இருக்கும் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோரை அவமதித்து விருதுநகரை சேர்ந்த ராஜேந்திரபாலாஜியின் படத்தையும், பெயரையும் போஸ்டரில் போட்டிருப்பது திருச்சி ர.ர.க்களை கொதிப்படைய செய்துள்ளது.
தண்டல்காரன்
இதனிடையே ஜெயலலிதா இருந்திருந்தால் எந்த ஒரு நிர்வாகியாவது மாவட்டச் செயலாளர் பெயர் இல்லாமல் இப்படி போஸ்டர் அச்சடிக்க முடியுமா என்றும், இப்போது தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் ஆகிவிட்டான் எனவும் நொந்துபுலம்பினார் நம்மிடம் இந்த செய்திக்கான தகவலை கூறிய நிர்வாகி. ஏற்கனவே ராஜேந்திரபாலாஜி மீது அதிருப்தியில் உள்ள முதல்வருக்கு இந்த போஸ்டர் விவகாரம் மேலும் கோபத்தை அதிகரித்திருக்கிறது.