திருச்சி-பெங்களூர் இடையே பகல் நேர வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்? இன்ப அதிர்ச்சி தந்த ரயில்வே முடிவு
திருச்சி: திருச்சி-பெங்களூர் இடையே பகல் நேர வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை அறிமுகம் செய்ய வேண்டும் என்று தெற்கு ரயில்வே தலைமையகத்திற்கு திருச்சி ரயில்வே கோட்டம் கோரிக்கை வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டின் 'வந்தே பாரத்' ரயில் சேவையை சென்னை சென்ட்ரல் - மைசூர் இடையே பிரதமா் நரேந்திர மோடி 2022 நவம்பரில் தொடங்கி வைத்தாா். காட்பாடி, பெங்களூர் வழியாகச் செல்லும் இந்த பாரத் ரயிலில் சுமாா் 130 சதவீத இருக்கைகள் நிரம்பி வருகின்றன. இந்த ரயிலுக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து, கோவை - சென்னை இடையே வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டது. இதற்கும் நல்ல வரவேற்பு கிடைத்து. அடுத்தாக சென்னையில் இருந்து ஆந்திராவின் விஜயவாடா நகருக்கு வந்தே பாரத் ரயில் அறிமுகம் செய்யப்பட்டது.. இந்த ரயில் இப்போது ஆந்திர மக்களுக்கு வரப்பிரசாதமாக உள்ளது.

இதனிடையே தென்மாவட்ட மக்கள் தங்கள் ஊருக்கு வந்தே பாரத் ரயில் இயக்க வேண்டும் என்று கோரினார்கள். எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள் பலரும் இந்த கோரிக்கையை முன்வைத்த நிலையில் சென்னை - திருநெல்வேலி இடையே வந்தே பாரத் இயக்கப்பட்டது. இந்த ரயில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. அடுத்தடுத்து கிடைத்த வரவேற்பை அடுத்து அடுத்ததாக கோவை பெங்களூர் இடையே வந்தே பாரத் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ரயிலும் நேர மாற்றத்திற்கு பின்னர் கோவை மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இப்படி தமிழகத்தில் இயக்கப்படும் எல்லா வழித்தடத்திலும் வந்தே பாரத் ரயில்கள் நல்ல வரவேற்பை பெறுவதால், மேலும் பல வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்களை இயக்க ரயில்வே போர்டு முடிவு செய்திருக்கிறது. சென்னை சென்ட்ரல் - மைசூர் இடையே வந்தே பாரத் ரயிலில் இருக்கைள் எப்போது நிரம்பி வழிவதால் கூடுதலாக ஒரு வந்தே பாரத் ரயிலை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதற்கு ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தது இதையடுத்து பிரதமா் நரேந்திர மோடி நாளை (மார்ச் 12) ஆமதாபாத்தில் இருந்து காணொலி வாயிலாக சென்னை சென்ட்ரல் - மைசூர் இடையே புதிய வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைக்கவுள்ளார்.
சென்னை - மைசூர் வந்தே பாரத் ரயில்: மேலும், கேரள மாநிலம் திருவனந்தபுரம் - காசா்கோடு வந்தே பாரத் ரயில் மங்களூரு வரை நீட்டிக்கப்பட உள்ளது, அதன் சேவையையும் பிரதமா் தொடங்கி வைக்கவுள்ளாா். தற்போது இயக்கப்பட உள்ள சென்னை - மைசூர் வந்தே பாரத் ரயில் ஏப்.4-ஆம் தேதி வரை சென்னை சென்ட்ரல் -பெங்களூர் இடையே மட்டும் இயக்கப்படும் என்றும் அதன்பின் மைசூர் வரை நீட்டிக்கப்படும் என்றும் அதேபோல், திருவனந்தபுரம் - காசா்கோடு இடையே வாரத்தின் 6 நாள்கள் இயக்கப்படும் 'வந்தே பாரத்' ரயில் மங்களூர் வரை நீட்டிக்கப்படவுள்ளது என்றும் ஜூலை 4-ஆம் தேதி முதல் தினசரி ரயிலாக இயக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது..
கோவை வழியாக புதிய ரயில் சேவை : இதேபோல் கொல்லத்தில் இருந்து திருப்பதிக்கு எா்ணாகுளம், பாலக்காடு, கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, சித்தூா் வழியாக புதிய ரயில் சேவை தொடங்கிவைக்கப்பட இருக்கிறது இதன் பயணிகள் சேவை மாா்ச் 15 முதல் தொடங்கப்பட உள்ளது. இதில், 7 குளிா்சாதன வசதி கொண்ட பெட்டிகள், 7 படுக்கை வசதி கொண்ட பெட்டிகள், 2 பொதுப் பெட்டிகள் கொண்டு இயக்கப்பட உள்ளது.
மதுரை - பெங்களூர் இடையே வந்தே பாரத் ரயில் : தமிழ்நாட்டில் வந்தே பாரத் ரயில் சேவைகளுக்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், மதுரை - பெங்களூர் இடையே வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்க ரயில்வே நிர்வாகம் முடிவெடுத்திருக்கிறது. மதுரை - பெங்களூர் இடையே பகல் நேர ரயில் இயக்க வேண்டும் என்ற பல ஆண்டு கோரிக்கை தற்போது நிறைவேறப்போகிறது. இந்த சேவை எப்போது ஆரம்பிக்கப்படும் என்பதை அதிகாரப்பூர்வமாக தெற்கு ரயில்வே இன்னமும் அறிவிக்கவில்லை..
அதேநேரம் மதுரையில் இருந்து புறப்படும் ரயில், திண்டுக்கல், கரூர், சேலம், தர்மபுரி, ஓசூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று பெங்களூர் செல்லும் என்றும், இந்த ரயில் ஆரஞ்ச் நிறத்தில் இருக்கும் என்கிறார்கள். நடுத்தர வர்க்கத்தினரை குறிவைத்து இயக்கப்படும் பெங்களூர்-மதுரை வந்தே பாரத் ரயில் நிச்சயம் மிகப்பெரிய வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐடி வேலைக்காக பல லட்சம் பேர் பெங்களூரில் வசிப்பதால் இந்த ரயில் தென்மாவட்ட மக்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கும் என்று தெரிகிறது.
திருச்சி-பெங்களூர் இடையே வந்தே பாரத் ரயில்: இதனிடையே பெங்களூர்-மதுரை வந்தே பாரத் ரயில் அறிவிப்பு ஒருபுறம் எனில், திருச்சி-பெங்களூர் இடையே பகல் நேர வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை அறிமுகம் செய்ய வேண்டும் என்று தெற்கு ரயில்வே தலைமையகத்திற்கு திருச்சி ரயில்வே கோட்டம் கோரிக்கை வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த கோரிக்கையை ஏற்று பகல் நேர அதிவேக ரயில் இயக்கப்பட்டால் திருச்சிக்கு மட்டுமல்ல, தஞ்சை, கரூர், பெரம்பலூர், அரியலூர், திருவாரூர், புதுக்கோட்டை உள்பட டெல்டா பகுதி மக்களுக்கு பெரிய பயனுள்ளதாக இருக்கும். இதனிடையே சென்னை -ஹைதராபாத், சென்னை-நாகர்கோவில் இடையேயும் வந்தே பாரத் ரயில் இயக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications