ஒரு வாரம் ஓய்வெடுக்கச் சொன்ன மருத்துவர்கள்! ஒரே நாளில் ஜூட் விட்ட அமைச்சர் கேஎன்.நேரு! பின்னணி என்ன?
திருச்சி: நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவை ஒரு வார காலம் மருத்துவர்கள் ஓய்வெடுக்குமாறு அறிவுறுத்திய நிலையில், ஒரே நாளில் வீட்டிலிருந்து ஜூட் விட்டிருக்கிறார்.
சென்னையில் உள்ள பிரபல கண் மருத்துவமனையில் அண்மையில் அமைச்சர் நேருவுக்கு சிறியளவில் கண் அறுவைச் சிகிச்சை நடைபெற்றது.
இந்த அறுவைச் சிகிச்சையை தொடர்ந்து கருப்பு கண்ணாடி ஒன்றை அணிந்துக்கொண்டு வழக்கம் போல் தனது பணிகளை கவனித்து வருகிறார் அமைச்சர் கே.என்.நேரு.

அமைச்சர் நேரு
திமுக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேருவுக்கு கண் பார்வை தொடர்பான பிரச்சனை இருந்து வந்தது. இதையடுத்து சென்னையில் உள்ள பிரபல கண் மருத்துவமனையில் அவருக்கு சிறியளவில் அதிநவீன முறையிலான அறுவைச் சிகிச்சை ஒன்று செய்யப்பட்டது. ஒரு வார காலமாவது வீட்டில் சொட்டு மருந்து ஊற்றிக்கொண்டு ஓய்வில் இருக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியும் அதை அவர் கேட்டதாக தெரியவில்லை.

எப்போதும் பரபரப்பு
எப்போதும் பரபரப்பாக சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டே இருக்கும் அவருக்கு, மருத்துவர்கள் சொன்னபடி வீட்டில் இருப்பது முடியாத காரியமாக இருந்திருக்கிறது. இதையடுத்து கண் கூச்சத்திற்காக கருப்பு கூலிங் கிளாஸ் ஒன்றை அணிந்துகொண்டு வழக்கமான தனது பணிகளை கவனிக்க ஆரம்பித்துவிட்டார். சென்னையிலிருந்து சேலம்(பொறுப்பு அமைச்சர்), திருச்சி, என மூன்று ஊர்களுக்கும் மாறி மாறி பயணம் செய்து வருகிறார்.

வெயிலுக்கு கண்ணாடி
முதலில் அமைச்சர் கே.என்.நேரு கண்ணாடி அணிந்திருப்பதை பார்த்த பலரும் வெயிலுக்கு தான் ஆய்வின் போது கண்ணாடி அணிந்திருக்கிறார் என்று நினைத்தார்கள். ஆனால் அவர் உள் அரங்கங்களில் நடைபெறும் ஆய்வுக்கூட்டங்களின் போதும், மேலும் கடந்த மூன்று நாட்களாக இடைவிடாமல் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கண்ணாடி அணிந்திருப்பதை கவனித்த பின்னரே அவருக்கு கண் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்ட தகவலே கட்சியினருக்கு தெரிய வந்தது.

அமைச்சர் ஐ.பெரியசாமி
அமைச்சர் கே.என்.நேருவுக்கு முன்னதாக கடந்த வாரம் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியும் கண் புரை அறுவைச் சிகிச்சை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது. அவரும் தற்போது கண்ணாடி அணிந்தவாறே அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார்.












Click it and Unblock the Notifications