பிரதமர் முன்னிலையில் ‘திராவிட மாடல்’ என அழுத்தி சொன்ன முதல்வர் ஸ்டாலின்.. ஆளுநர் கொடுத்த ரியாக்ஷன்
திருச்சி: திராவிட மாடல் காலாவதியான கொள்கை என்று ஆளுநர் ஆர் என் ரவி கடந்த ஆண்டு விமர்சித்து இருந்தார். இந்த நிலையில், முதல்வர் மு க ஸ்டாலின் ஆளுநர் முன்னிலையிலேயே திராவிட மாடல் அரசு அனைவருக்கும் கல்வி என்ற இலக்கோடு சமூக நீதி புரட்சியை கல்வித்துறையில் நடத்தி வருகிறது என்று பேசினார்.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா மற்றும் திருச்சி விமான நிலையத்தில் கட்டப்பட்டுள்ள புதிய முனையம் திறந்து வைத்தல் உள்பட பல்வேறு நலத்திட்ட தொடக்க நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகை தந்தார். பிரதமர் மோடியை திருச்சி விமான நிலையத்திற்கு வந்து வரவேற்ற முதல்வர் மு.க ஸ்டாலின் பின்னர் பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிலும் கலந்து கொண்டார்.

பிரதமர் மோடி, ஆளுநர் ஆர் என் ரவி மற்றும் முதல்வர் மு.க ஸ்டாலின் ஆகியோர் ஒரே மேடையில் அமர்ந்து இருந்தனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார். முதல்வர் கூறுகையில், இந்தியாவிலேயே உயர் கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலமாக தமிழ்நாடு தான் உள்ளது. கல்வியில் சிறந்த என்று எந்த பட்டியல் எடுத்தாலும் அதில் தமிழ்நாட்டு கல்வி நிறுவனங்கள்தான் அதிகமாக இடம் பெற்று இருக்கும்.
நூறு ஆண்டுகளுக்கு முன்பு நீதிக்கட்சி ஆட்சி காலத்தில் கல்விக்காக போடப்பட்ட விதைதான் இன்னைக்கு, கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு வளர்ந்து உயர்ந்து நிற்கிறோம். நமது திராவிட மாடல் அரசு அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் கல்லூரிக் கல்வி... ஆராய்ச்சி கல்வி என்ற இலக்கோடு தான் சமூக நீதி புரட்சியை கல்வித்துறையில் நடத்தி வருகிறது.
இன்னார் தான் படிக்கவேண்டும் என்ற நிலையை மாற்றி அனைவருக்கும் அனைத்து விதமான வாய்ப்புகளை உருவாக்கி தருகிறோம். தமிழ்நாட்டின் மாணவர்களை படிப்பிலும் வாழ்விலும் வெற்றி பெற வைக்க நான் முதல்வன் என்ற திட்டம் என்ற உருவாக்கப்பட்டுள்ளது. உயர் கல்வி மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில், புதுமைப்பெண் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
தமிழ்நாடு மாணவர்கள், போட்டி தேர்வுகள் திறன் சார்ந்த தேர்வுகளுக்கு தயாராகும் வகையில் மதுரையில் கலைஞர் நுற்றாண்டு நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. பாரதிதாசன் பல்கலைக்கழகம் உலக பல்கலைக்கழக தரவரிசை பட்டியலிலும் தேசிய தரவரிசை பட்டியலிலும் இடம் பெற்றுள்ளது. அப்படிப்பட்ட சிறப்பு மிக்க பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள பாரதிதாசன் சிலை, பொறியியல் மற்றும் தொழில் நுட்பதுறைகள் தமிழ் மையம் ஆகியவற்றை தொடங்கியது நம்முடைய திராவிட அரசுதான் என்பதை பெருமையோடு குறிப்பிட்டு காட்ட விரும்புகிறேன்" என்றார்.

முதல்வர் மு.க ஸ்டாலின் இந்த பேச்சை மேடையில் இருந்த ஆளுநர் ஆர் என் ரவி கவனித்துக் கொண்டு இருந்தார். முதல்வர் திராவிட மாடல் அரசு செய்த சாதனைகள் என பட்டியலிட்டு ஆளுநர் முன்பே கூறியது முக்கியத்துவம் பெற்றது. ஏனெனில், கடந்த ஆண்டு ஆங்கில பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டி அளித்து இருந்த ஆளுநர் ரவி, திராவிட மாடல் ஆட்சி என்பது வெறும் அரசியல் கோஷம் தான்.
காலாவதியான ஒரு கொள்கையை உயிர்ப்புடன் வைக்க மேற்கொள்ளப்படும் முயற்சியாகும். திராவிட மாடல் என்பது நமது ஒரே பாரதம் கொள்கைக்கு எதிரானது என்று கூறியிருந்தார். இந்த நிலையில், தான் பிரதமர், ஆளுநர் பங்கேற்ற நிகழ்ச்சியிலேயே முதல்வர் மு.க ஸ்டாலின் திராவிட மாடல் அரசு என அழுத்தமாக கூறியது அங்கிருந்தவர்கள் மத்தியில் கவனம் பெற்றது.












Click it and Unblock the Notifications