திட்டம் மத்திய அரசுடையது தான்.. ஆனால் நிதி மாநில அரசுடையது.. துரை வைகோ எதை சொல்றாருன்னு பாருங்க
திருச்சி: மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அறித்தாலும் அதற்கான நிதியை முறையாக ஒதுக்குவதில்லை. பெயர் மட்டும்தான் 100 நாள் வேலை திட்டம். ஆனால், 30 முதல் 40 நாள்களுக்குத் தான் பொதுமக்களுக்கு வேலை கொடுக்கப்படுகிறது. பல்வேறு திட்டங்களுக்கான நிதியை மத்திய அரசு மாநில அரசுக்கு ஒதுக்காமல் தவறு செய்து வருகிறது என்று துரை வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.
ஒன்றிய அரசின் முக்கிய திட்டங்களில் ஒன்று மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டம். இத்திட்டத்திற்கான நிதியை ஆண்டுதோறும் குறைத்துக் கொண்டே வருகின்றனர். தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் இத்திட்டத்துக்கான நிதியை குறைத்து வருகின்றனர். திருச்சி மாவட்டத்திலும் இந்த திட்டத்துக்கான நிதி குறைக்கப்பட்டிருந்தாலும், முடிந்த அளவுக்கு குறைக்கப்பட்ட நிதியில் இருந்து மாநில அரசிடம் இருந்து கூடுதலாக நிதி கொடுக்கப்பட்டு சிறப்பாக செயல்படுத்தும் வகையில் மாவட்ட ஆட்சியர் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.

இருப்பினும், சில கிராமங்களில் சுத்தமாக வேலை கொடுக்கப்படவில்லை. அதற்கான வாய்ப்பு அங்கில்லாமல் இருந்தது. கரூர் எம்பி ஜோதிமணியும் அதனை கூறியிருந்தார். ஒன்றிய அரசு இத்திட்டத்திற்கான நிதியைக் குறைக்காமல் குறைந்தபட்சம் திட்டத்தின் பெயர்தான் 100 நாள்.
ஆனால், எங்கேயும் 100 நாட்கள் வேலை கொடுக்கப்படுவதில்லை. 30 நாள், 40 நாள்களே வேலைகள் கொடுக்கப்படுகின்றன. சில பகுதிகளில் அந்த வேலையும் கிடைப்பதில்லை. எனவே, இந்தியா கூட்டணி சார்பில் நாடாளுமன்றத்தில் இத்திட்டத்திற்கான நிதியை குறைக்காமல் முழுமையாக கொடுக்க வேண்டும் என்று அனைத்து இயக்கம் சார்பிலும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆனால், இதனை செயல்படுத்தும் நோக்கில் மத்திய அரசு இல்லை. நிதி குறைக்கப்பட்ட போதிலும் தமிழக அரசு மற்றும் திருச்சி மாவட்ட ஆட்சியர் இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வருகின்றனர். பிரதமர் வீடு என்று சொல்கிறார்கள். ஆனால், அதற்கான பாதி நிதியை மாநில அரசே வழங்குகிறது. இதுபோல பல திட்டங்களுக்கு மாநில அரசே நிதி வழங்கிக் கொண்டிருக்கிறது.
மத்திய அரசு மாநில அரசுக்கு நிதி ஒதுக்குவதில் மிகப்பெரிய தவறை செய்து கொண்டிருக்கின்றனர். அதனுடைய பாதிப்பை மக்கள்தான் சந்திக்கின்றனர். திருச்சி விமான நிலையத்தில் சமீபத்தில் விமானத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இரண்டு மணி நேரம் மேலேயே சுற்றிக் கொண்டிருந்தது. ஏர் இந்தியாவைப் பொருத்தவரை விமானக் கோளாறு, விமானப் போக்குவரத்தை ரத்து செய்வது, தாமதமாக வரும் பிரச்னை ஏர் இந்தியாவில் அதிக அளவில் உள்ளது.
ஏர் இந்தியா மட்டுமல்லாமல் குறிப்பிட்ட காலத்தில் செய்ய வேண்டிய அனைத்து பராமரிப்புப் பணிகளும் செய்யப்படுகிறதா, விபத்துகள் நடப்பதைத் தவிர்க்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த ஒரு சம்பவம் மட்டுமல்ல கடந்த ஆண்டுகூட பல்வேறு சம்பவங்களில் மக்கள் நூழிலையில் தப்பித்துள்ளனர்.
எதிர்காலத்தில் இதுபோன்ற நிலை ஏற்படாமல் தவிர்க்க முறையான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு விமானத்தை பயன்படுத்தாமல் இருப்பதை அல்லது மேம்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும். இந்த நாடளுமன்றக் கூட்டத்தில் திருச்சி சம்பவம் குறித்து கட்டாயம் பேசப்படும். இதற்கான தீர்வு குறித்து அங்கு வலியுறுத்தப்படும் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications