பிரணவ் ஜுவல்லர்ஸ் மோசடி! திருச்சி மாவட்டத்தில் மட்டும் 559 புகார்கள்! அப்ப மற்ற கிளைகளில்?
திருச்சி: பிரணவ் ஜுவல்லர்ஸ் மோசடி குறித்து திருச்சி மாவட்டத்தில் மட்டும் இதுவரை 559 புகார்கள் பெறப்பட்டுள்ளதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் துணை கண்காணிப்பாளர் லில்லிகிரேஸ் தெரிவித்துள்ளார்.
பிரபல நகைக்கடை: திருச்சி கரூர் சாலையில் ப்ரணவ் ஜுவல்லர்ஸ் என்ற பெயரில் பிரபல நகைக்கடை ஒன்று இயங்கி வந்தது. இந்த நகைக்கடை சார்பில் 0% செய்கூலி, சேதாரம் என்றும் தங்களிடம் நகை வாங்கினால் சவரனுக்கு 4,000 ரூபாய் வரை சேமிக்கலாம் எனவும் கவர்ச்சிக்கர விளம்பரங்கள் வெளியிடப்பட்டன. போதாகுறைக்கு நடிகர் பிரகாஷ்ராஜ், நடிகை ராதிகா உள்ளிட்ட திரைபிரபலங்களை வைத்தும் யூடியூபர்கள் மூலம் விளம்பரம் செய்யப்பட்டன.
குருவி சேர்ப்பது போல்: இதனை நம்பி திருச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார மக்கள் குருவி சேர்ப்பது போல் சிறுக சிறுக சேமித்த பணத்தை மாதந்தோறும் ப்ரணவ் ஜுவல்லர்ஸில் நகைச்சீட்டு கட்டி வந்தனர். 500 ரூபாயில் தொடங்கி லட்சங்கள் வரை நகைச் சீட்டுகள் கட்டப்பட்டிருக்கின்றன. திருச்சி மட்டுமின்றி மதுரை, சென்னை, கோவை, நாகர்கோவில், கும்பகோணம், என 9 இடங்களில் பிரணவ் ஜுவல்லர்ஸ் கிளைகள் செயல்பட்டு வருகின்றன.

பொருளாதார குற்றப்பிரிவு: ப்ரணவ் ஜூவல்லர்ஸ் மூடப்பட்டதால் தங்கள் முதலீட்டை திருப்பி பெற்றுக் கொடுக்குமாறு கடையை முற்றுகையிட்ட முதலீட்டாளர்கள் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாரிடம் புகார் அளிக்க படையெடுத்து வருகின்றனர். இந்நிலையில் இதுவரை திருச்சி மாவட்டத்தில் மட்டும் 559 பேர் புகார்கள் அளித்துள்ளதாகவும், ரூ.25 கோடியே 90 லட்சம் வரை மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு லில்லிகிரேஸ் தெரிவித்துள்ளார்.
மற்ற கிளைகளில்?: திருச்சி மாவட்டத்திலிருந்து மட்டுமே 559 பேர் இதுவரை புகார் கொடுத்திருக்கிறார்கள் என்றால் இன்னும் மதுரை, நாகர்கோவில் உள்ளிட்ட மற்ற பிரணவ் ஜுவல்லர்ஸ் கிளைகளில் நகைச்சீட்டு கட்டி ஏமாந்தவர்கள் எத்தனை பேரோ. இதனிடையே பிரணவ் ஜுவல்லர்ஸ் மேலாளர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், வாடிக்கையாளர்களுக்கு திருப்பிக் கொடுக்க வேண்டிய தொகை பற்றி பிரணவ் நகைக்கடை உரிமையாளர் மதன் கடந்த வாரம் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications