பிரதமர் மோடியை சந்தித்த போது எடப்பாடி பழனிசாமி வைத்த மூன்று முக்கிய கோரிக்கைகள்.. என்னென்ன?
திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் நேற்று (சனிக்கிழமை) இரவு 10.45 மணியளவில் பிரதமர் மோடியை எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது பிரதமர் மோடியிடம் கோரிக்கை மனு ஒன்றையும் எடப்பாடி பழனிசாமி அளித்துள்ளார்.
தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்க திட்டத்தை தொடங்கி வைத்த பிறகு பிரதமர் மோடி திருச்சி வந்தார். திருச்சி விமான நிலையத்தில் பிரதமர் மோடியை ஆளுநர் ஆர்.என்.ரவி, எல்.முருகன், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.என்.நேரு, தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் மற்றும் துரைவைகோ எம்.பி உள்ளிட்டோர் வரவேற்றனர்.

தமிழகத்தில் வரும் 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக - பாஜக இடையே கூட்டணி அமைந்துள்ளது. திருச்சி விமான நிலையத்தில் பிரதமருக்கு அரசு சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து அவரை எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார். சில நிமிடங்கள் இந்த சந்திப்பு நடந்தது. கே.பி. முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் உடன் இருந்தனர்.
பிரதமர் மோடியை சந்தித்த போது எடப்பாடி பழனிசாமி கோரிக்கை மனு ஒன்றையும் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
1. விவசாய கடன் வழங்குவதற்கு சிபில் ஸ்கோர் கேட்பதில் இருந்து வங்கிகள் விவசாயிகளுக்கு விதிவிலக்கு வழங்க வேண்டும் .
2. கோதாவரி - காவிரி இணைப்பு திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்து உடனடியாக நிறைவேற்ற வேண்டும் .
3. தமிழ்நாட்டில் ராணுவ தளவாட உற்பத்திக்கு வழிவகுக்கும் பிரத்யேக ராணுவ வழித்தடம் ஒன்றை சென்னை, கோவை, ஓசூர், சேலம், திருச்சியை இணைத்து செயல்படுத்த வேண்டும். ஆகிய கோரிக்கைகளை எடப்பாடி பழனிசாமி முன்வைத்துள்ளார். இந்த மனுவை பெற்றுக் கொண்ட பிரதமர் மோடி அவர்கள் கோரிக்கை மனுவை பரிசீலித்து ஆவண செய்வதாக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியிடம் உறுதி அளித்துள்ளார்.
இந்த சந்திப்புக்கு பிறகு பிரதமர் மோடி, திருச்சி நட்சத்திர ஹோட்டலுக்கு புறப்பட்டார். முன்னதாக பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதன்பிறகு பிரதமர் மோடி கார் மூலம் சென்று திருச்சி கலெக்டர் அலுவலக சாலையில் உள்ள பிரபல தனியார் நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ளார்.
காலை காரில் விமான நிலையம் செல்லும்போது, சுமார் 8 கிலோமீட்டர் தொலைவிற்கு பிரதமர் மோடி ரோடு ஷோவாக சென்று மக்களை சந்திக்கிறார். கங்கைகொண்ட சோழபுரம் புறப்பட்டு செல்லும் மோடி, அங்கு பிரகதீஸ்வரர் கோயிலில் சாமி தரிசனம் செய்கிறார். பின்னர் ஆடித் திருவாதிரை விழாவில் பங்கேற்று, ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார். பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு 5 அடுக்கு பாதுகாப்பு மேற்கூறிய இடங்களில் போடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications