ஊரை விட்டு தள்ளி வைத்த ‘நாட்டாமை’.. கோர்ட் படியேறிய குடும்பம் - அப்புறம் நடந்ததுதான் ஹைலைட்டே..!
திருச்சி: திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் அருகே ஒரு குடும்பத்தை ஊரை விட்டு தள்ளி வைத்த நாட்டாமை உள்ளிட்ட 9 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் அருகே மாற்று சமூகத்தைச் சேர்ந்த பெண்ணைக் காதல் திருமணம் செய்ததால் ஒரு குடும்பத்தை அந்த ஊரின் நாட்டாமை உள்ளிட்ட ஊர் முக்கியஸ்தர்கள் ஊரை விட்டு விலக்கி வைத்துள்ளனர்.
இதை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், ஒரு குடும்பத்தை ஊரை விட்டு தள்ளி வைத்த ஊர் முக்கியஸ்தர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கழிப்பறைக்குள் சென்ற ஊழியர்கள்.. கதவை திறந்து பார்த்தா! அம்மாடி! திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு
ஊரை விட்டு ஒதுக்கி வைத்து
திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் அருகேயுள்ள தெற்கு எதுமலை கிராமத்தைச் சேர்ந்த வெள்ளையன் என்பவரின் மனைவி செல்ல பாப்பா. இவர்களுக்கு 4 பிள்ளைகள் உள்ளனர். இளைய மகன் ஜெகதீசன் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையைச் சேர்ந்த கோமதி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். கிராம கட்டுப்பாட்டை மீறி காதல் திருமணம் செய்ததாகக் கூறி கிராம முக்கியஸ்தர்கள் செல்லபாப்பா குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைத்தனர்.
மீண்டும் தீண்டாமை
ஆனால், கோமதி அதே சமூகத்தைச் சேர்ந்தவர் என்று நிரூபித்த பிறகு தண்ட வரியுடன் சேர்த்து செல்ல பாப்பா குடும்பம் மொத்தமும் ஊர் முக்கியஸ்தர்கள் காலில் விழுந்த காரணத்தால் மீண்டும் கிராமத்திற்குள் சேர்த்துள்ளனர். ஆனால் கொமதி வேறு சமூகத்தைச் சேர்ந்தவர் என்று கூறி கடந்த 2014ஆம் ஆண்டு மீண்டும் கிராம முக்கியஸ்தர்கள் செல்லபாப்பா குடும்பத்தை ஒதுக்கி வைத்துள்ளனர். ஊர் திருவிழாவின்போதும் அவர்கள் குடும்பத்தினரிடம் தலைக்கட்டு வரி வசூல் செய்வதை தவிர்த்துள்ளனர். இது பற்றி ஊர் முக்கியஸ்தர்களிடம் கேட்டதற்கு உங்களைத்தான் ஊரை விட்டு தள்ளி வைத்திருக்கிறோமே எனக் கூறியுள்ளனர்.
போலீசில் புகார்
இதனால் கடும் மன உளைச்சல் அடைந்த செல்லபாப்பா குடும்பத்தினர் சிறுகனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து டிஎஸ்பி தலைமையிலான போலீசார் முன்னிலையில் ஊர் முக்கியஸ்தர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. ஆனாலும் ஊர் முக்கியஸ்தர்கள் அவர்களை ஊருக்குள் சேர்த்துக் கொள்ள முடியாது என விடாப்பிடியாக மறுத்துள்ளனர்.
நீதிமன்றம்
இதையடுத்து செல்லபாப்பாவின் மூத்த மகன் ரமேஷ் மதுரை உயர் நீதிமன்றத்தில் இதுதொடர்பாக வழக்கு தொடர்ந்தார். ஊர் நாட்டாமை உள்ளிட்ட ஊர் முக்கியஸ்தர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டது. இதையடுத்து கிராம நாட்டாமை குண்டு பெரியசாமி, உட்பட 9 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.