வருங்கால முதலமைச்சர்! உற்சாக குரல் கொடுத்த ரசிகர்கள்! போலீசாருக்கு சைகை காட்டிய ஏகே! கொண்டாட்டம்..!
திருச்சி : திருச்சியில் துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொள்ள வந்துள்ள நிலையில், ரசிகர்களை பார்க்க ரைபிள் கிளப் மடியில் ஏறிய அஜித் அவர்களுக்கு கையசைத்து முத்தமிட்ட நிலையில் அவரைப் பார்த்த உற்சாகத்தில் "வருங்கால முதலமைச்சர் வாழ்க" என முழக்கமிட்டனர்.
திருச்சி மாநகர கே.கே.நகர் ஆயுதப்படை வளாகத்தில் செயல்பட்டு வரும் ரைபிள் கிளப்பில் 47-வது மாநில துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது.
இதில் பிஸ்டல் மற்றும் ரைபிள் துப்பாக்கி சுடும் போட்டி கடந்த 25 ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் நிலையில் தமிழகம் முழுவதும் இருந்து துப்பாக்கி சுடுதலில் பயிற்சி பெற்ற சுமார் 1,300 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

நடிகர் அஜித்
இவர்களுடன் பிரபல நடிகரும் கார் ரேஸ், பைக் ரேஸ், ட்ரோன் மேக்கிங் என அசத்தி வரும் முன்னர் 'தல' என ரசிகர்களால் அழைக்கப்பட்ட நடிகர் அஜித்தும் இந்த துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்றுள்ளார். இதில் 10 மீட்டர், 25 மீட்டர் மற்றும் 50 மீட்டர் பிஸ்டல் பிரிவில் நடிகர் அஜித் குமார் கலந்துகொண்டுள்ளார். இதற்காக இன்று அவர் சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தார். பின்னர் கார் மூலம் போட்டி நடைபெறும் மைதானத்திற்கு வந்தார்.

ரசிகர்கள் திரண்டனர்
இதனிடையே அங்கு நடிகர் அஜித்தை பார்க்க ஏராளமான ரசிகர்கள் திரண்டனர். நேரம் செல்ல செல்ல அங்கு ரசிகர்கள் கூட்டம் கூடிய நிலையில், கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர். ஒரு கட்டத்தில் திருவிழா போல கூட்டம் கூடிய நிலையில் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. திருச்சி மட்டுமல்லாது அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்தும் ரசிகர்கள் திரள தொடங்கியதால் என்ன செய்வது என்று தெரியாமல் காவல்துறையினர் குழப்பம் அடைந்தனர்.

பாதுகாப்பு பணி
மேலும் குறைந்த அளவிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்ததால் மோதல்கள் ஏற்படும் வாய்ப்பு இருந்தது. இதனையடுத்து நடிகர் அஜித் ரசிகர்களை பார்த்து கையசைத்து சென்றால் அவர்கள் சென்று விடுவார்கள் எனவும் எனவே ரசிகர்களை அஜித் சந்திக்க வேண்டும் என காவல்துறை தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனையடுத்து காவல் துறையினரின் கோரிக்கையை ஏற்ற நடிகர் அஜித் திருச்சி ரைபிள் கிளப் மாடியில் இருந்து ரசிகர்களை பார்த்து கைசித்ததோடு அன்பு முத்தமும் கொடுத்தார்.

அஜித் கை அசைத்தார்
சுமார் ஐந்து நிமிடம் ரசிகர்களை பார்த்து நடிகர் அஜித் கை அசைத்துச் சென்ற நிலையில் அவரைப் பார்த்த உற்சாகத்தில் ரசிகர்கள் அஜித் வாழ்க என முழுக்க விட்டனர் தொடர்ந்து அஜித்தை பார்த்த உற்சாகத்தில் நடனமாட தொடங்கினர். அஜித் சென்றபிறகும் ரசிகர்கள் கூட்டம் மேலும் அதிகரித்ததால் அங்கிருந்த போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்ததாக கூறப்படுகிறது. மேலும் நடிகர் அஜித் இன்னும் இரண்டு நாட்கள் திருச்சியில் தான் தங்கி இருப்பார் எனும் தகவல் வெளியானது.

அன்பு கோரிக்கை
அடுத்து அவர் தங்கும் வாய்ப்புள்ளதாக கூறப்படும் ஹோட்டல்களிலும் ரைபில் கிளப்பிலிருந்து விமான நிலையம் வரைக்கும் செல்லும் வழியிலும் ஆங்காங்கே ரசிகர்கள் கூடியிருக்கின்றனர் முன்னதாக நடிகர் அஜித்தை பார்க்க திரண்டு இருந்த ரசிகர்களின் ஒரு கூட்டத்தினர் வருங்கால முதல்வர் அஜித் வாழ்க தமிழகத்தின் வருங்கால முதலமைச்சர் என கோஷங்களை எழுப்பினர். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. மேலும் நடிகர் அஜித்தை பார்க்க கண்டறிந்த கூட்டத்தை போலீசார் தடியடி நடத்தி கலைக்கும் என்ற போது அவர்களை தாக்க வேண்டாம் என போலீசாருக்கு நடிகர் அஜித் அன்பு கோரிக்கை விடுத்த காட்சிகளும் அவரது ரசிகர்களால் வெகுவாக பரப்பப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications