குவைத்தில் இருந்து திருச்சி வந்த 120 பயணிகள்.. 2 பேருக்குக் காய்ச்சல்.. மருத்துவமனையில் அனுமதி
திருச்சி: குவைத்தில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு நேற்று மாலை வந்த பயணிகளில் 2 பேருக்குக் காய்ச்சல் இருந்ததால் அவர்களை அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள்.
திருச்சி விமான நிலையத்தில் குவைத் நாட்டில் இருந்து விமானம் மூலம் நேற்று மாலை வருகை புரிந்த 120 பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்றதை மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருச்சி விமான நிலையத்திற்கு நேற்று மாலை குவைத் நாட்டில் இருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் 120 பயணிகள் வருகை புரிந்தனர். நேற்று மாலை பல்வேறு மாவட்டங்களில் உள்ள குவைத் வாழ் தமிழர்கள் 120 பேர் திருச்சிக்கு திரும்பினர்.
மாவட்டம் வாரியாக அவர்களது பட்டியலின்படி, அரியலூர் 3, சென்னை 3, கோயம்புத்தூர் 1, கடலூர் 7, கள்ளக்குறிச்சி 1, காஞ்சிபுரம் 3, கன்னியாகுமரி 4, மதுரை 2, மயிலாடுதுறை 2, நாகப்பட்டிணம் 4, நாமக்கல் 1, பெரம்பலூர் 3, புதுக்கோட்டை 10, இராமநாதபுரம் 12, சேலம் 3, சிவகங்கை 7, தஞ்சாவூர் 17, திருப்பூர் 1, திருவண்ணாமலை 7, திருவாரூர் 5, திருச்சி 5, விழுப்புரம் 7, விருதுநகர் 2 என 118 பயணிகளும், ஆந்திரபிரதேசத்தில் இருந்து 1 பயணியும், இதர நபர் ஒருவரும் என மொத்தம் 120 பயணிகள் திருச்சி வந்தனர்.
கொரோனா வைரஸ் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கையாக மத்திய சுகாதார அமைச்சகம் வழிகாட்டுதலின்படி, சுகாதாரத்துறையினர் மூலம் விமான நிலையத்தில் பயணிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில், குவைத் நாட்டில் இருந்து வந்த 2 நபர்களுக்கு காய்ச்சல் அறிகுறி இருந்ததால் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மீதமுள்ள நபர்கள் அந்தந்த மாவட்டங்களுக்கு சிறப்பு வாகனங்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந் நிகழ்ச்சியில் திருச்சி வருவாய் கோட்டாட்சியர் எஸ்.விஸ்வநாதன், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) டாக்டர் சுப்ரமணி, திருச்சி கிழக்கு வட்டாட்சியர் மோகன் மற்றும் பலர் உடனிருந்தனர்.












Click it and Unblock the Notifications