திருச்சி புறநகர் பகுதி அம்மா உணவகங்களிலும் மே 3 வரை மூன்று வேளையும் இலவச உணவு .. அதிமுக அறிவிப்பு
திருச்சி: துவாக்குடி, துறையூா் பகுதிகளில் உள்ள அம்மா உணவகங்களிலும் மே 3ஆம் தேதி வரை 3 வேளையும் இலவசமாக உணவு வழங்குவதற்கான செலவையும் திருச்சி புறநகர் மாவட்ட அதிமுகவினர் ஏற்றுள்ளனர்.
ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ளவா்களுக்கு அதிமுக சார்பில் உணவுப் பொருள்கள் வழங்கப்படும் என்ற தலைமைக் கழகத்தின் உத்தரவின்படி திருச்சி துவாக்குடி பகுதியில் உள்ள 150 துப்புரவுத் தொழிலாளா்களுக்கு உணவுப்பொருள்கள் தொகுப்பை அதிமுக புறநகர் மாவட்ட செயலாளா் டி. ரத்தினவேல் வழங்கினார்.
மேலும், திருவெறும்பூா் ஒன்றியப் பகுதிகளில் 150 பேருக்கான உணவுப்பொருள்கள் தொகுப்பை வட்டாட்சியா் ஞானசெளந்தரியின் பொறுப்பில் வழங்கப்பட்டன. துவாக்குடி, துறையூா் பகுதிகளில் உள்ள அம்மா உணவகங்களில் மே 3ஆம் தேதி வரை 3 வேளையும் இலவசமாக உணவு வழங்குவதற்கான செலவையும் அதிமுக புறநகர் மாவட்டம் ஏற்றுள்ளது.
நிகழ்ச்சியில், துவாக்குடி நகரச் செயலாளா் எஸ்.பி. பாண்டியன், திருவெறும்பூா் ஒன்றியச் செயலாளா் எஸ்.எஸ். ராவணன், அண்ணா தொழிற்சங்கச் செயலாளா் ஆறுமுகம், டி.டி. கிருஷ்ணன், முத்துக்குமார், கார்த்திக், சுரேஷ்குமார், உள்ளிட்டோர் பங்கேற்றனா்.
முன்னதாக திருச்சி மாநகரில் புத்தூர், தென்னூர் உழவர் சந்தை, உறையூர் சாலை ரோடு, ஜங்ஷன் ராக்கின்ஸ் ரோடு, கல்கண்டார்கோட்டை, அரியமங்கலம் ஜெகநாதபுரம் ஆகிய 6 இடங்களில் உள்ள அம்மா உணவகங்களில் மே 3-ம் தேதி வரை மக்களுக்கு இலவசமாக உணவு வழங்க ஆகும் செலவை அதிமுக மாநகர் மாவட்டம் ஏற்றுக்கொண்டது.
இதேபோல் சேலம் மாநகராட்சியில் உள்ள 11 அம்மா உணவகங்களில் அதிமுக சார்பில் மூன்று வேளையும் மக்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அண்மையில் அறிவித்தார். இந்நிலையில் அம்மா உணவகங்களில் அதிமுக சார்பில் இலவச உணவு வழங்கப்படுவதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அரசே இலவசமாக உணவு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன.