சல்யூட்! அரசு மரியாதையுடன் நடக்கும் தலைமை ஆசிரியர் அருட்தந்தை பிரான்சிஸ் சேவியர் உடல் அடக்கம்!
திருச்சி: உடல் உறுப்பு தானம் செய்தவர்களின் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் நடத்தப்படும் என தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அறிவித்த நிலையில், திருச்சி அருகே திருவெறும்பூரில் உடல் உறுப்பு தானம் செய்து மறைந்த அருட்தந்தை பிரான்சிஸ் சேவியரின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட உள்ளது.
இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது ட்விட்டர் பதிவில், "திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட பொன்மலைப்பட்டியில் அமைந்துள்ள திரு இருதய அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் அருட்தந்தை முனைவர் பிரான்சிஸ் சேவியர் அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக மறைந்துள்ளார். தனது உடல் உறுப்புகளை கொடையளித்ததன் காரணமாக தனக்கும், திருவெறும்பூர் தொகுதிக்கும் புகழ் சேர்த்துள்ளார் தலைமையாசிரியர் அருட்தந்தை அவர்கள்.

முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க அருட்தந்தை பிரான்சிஸ் சேவியர் அவர்களின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படவுள்ளது. உடல் உறுப்பு கொடையின் காரணமாக, இவ்வுலகில் மீண்டும் பிறக்கவுள்ள தலைமையாசிரியர் பிரான்சிஸ் சேவியர் அவர்களுக்கு புகழஞ்சலி செலுத்துவோம்! " எனத் தெரிவித்துள்ளார்.
தேனியைச் சேர்ந்த அரசு ஊழியர் விபத்தில் உயிரிழந்து மூளைச் சாவு அடைந்த நிலையில் அவர் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டிருப்பதால் அவருக்கு அண்மையில் அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு மேற்கொள்ளப்பட்டது. உடல் உறுப்பு தானம் செய்வோரின் உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடத்தப்படும் என்று முதல்வர் அறிவித்த பின்னர் முதல் நபராக வடிவேலின் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிலையில், இன்று இரண்டாவது நபராக அருட்தந்தை முனைவர் பிரான்சிஸ் சேவியர் உடல், அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. உடல் உறுப்பு தானம் செய்பவர்களுக்கு அரசு மரியாதை வழங்கப்படும் என்ற தமிழ்நாடு அரசின் அறிவிப்பு, இன்னும் ஏராளமானோரை உடல் உறுப்பு தானம் செய்ய ஊக்குவிக்கும், இது உடல் உறுப்புகள் செயலிழந்த பலரின் உயிரைக் காப்பாற்றும் என்பதால், முதல்வரின் அறிவிப்பு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications