பேனா சின்னம்! ஆடு பகை குட்டி உறவா? கனிமொழிக்கு பதவி கொடுத்த பாஜக! அர்ஜுன் சம்பத்துக்கு வந்ததே கோபம்!
திருச்சி : நாடாளுமன்றத்தில் பஞ்சாயத்து ராஜ் நிலை குழு தலைவர் பொறுப்பை மாநிலத்திற்கு சுயாட்சி கேட்கும் திமுகவின் கனிமொழிக்கு வழங்கியதை வன்மையாக கண்டிக்கிறோம் என இந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜுன் சம்பத் ஆவேசமாகக் கூறியுள்ளார்.
மத்திய அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்ராஜ் நிலைக்குழுவின் உறுப்பினர்களை நியமனம் செய்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி மக்களவை எம்பிக்கள் 17 பேரும், ராஜ்யசபா எம்.பி.,க்கள் 10 பேரும் மத்திய அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் நிலைக்குழுவின் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மத்திய அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் நிலைக்குழுவின் தலைவராக திமுக மகளிரணி செயலாளரும், முதல்வர் ஸ்டாலினின் சகோதரியுமான கனிமொழி எம்.பி. நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கனிமொழிக்கு பதவி
இந்நிலையில் கனிமொழிக்கு பதவி வழங்கியதை இமக அர்ஜுன் சம்பத் வன்மையாகக் கண்டித்துள்ளார்.
திருச்சி மலைக்கோட்டை மலைவாசல் அருகில் 200 பேருக்கு அன்னதான நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வை இந்து மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் அர்ஜூன் சம்பத் துவக்கி வைத்து
அன்னதானம் வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜுன் சம்பத்," திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழிக்கு நேற்று நாடாளுமன்றத்தில் பஞ்சாயத்து ராஜ் நிலை குழு தலைவர் பொறுப்பை வழங்கியுள்ளனர்.

பேனா நினைவு சின்னம்
மாநிலத்திற்கு சுயாட்சி கேட்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தினர் கிராமத்திற்கு சுயாட்சி கொடுப்பதில்லை அத்தகைய கட்சியை சேர்ந்த கனிமொழிக்கு இந்த பதவி கொடுத்ததை இந்து மக்கள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. கருணாநிதியின் பேனா நினைவு சின்னம் கடற்கரையில் அமைப்பதற்கு ஆரம்ப கால அனுமதியை மத்திய அரசு வழங்கியுள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம்.

இந்து என்றாலே அலர்ஜி
தொல்.திருமாவளவனுக்கு இந்து என்கின்ற வார்த்தை அலர்ஜியாக உள்ளது. அதனால்தான் இந்து சமய அறநிலையத்துறையை சைவம் வைணவம் என தனித்தனியாக பிரிக்க வேண்டும் என்கிறார். வாதத்திற்காக இதை எடுத்துக் கொண்டாலும் திருமாவளவன் வேட்பு மனு தாக்கல் செய்த சான்றிதழில் இந்து என்று தான் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் தான் மு.க.ஸ்டாலின் வீரமணி உள்ளிட்டோரின் சான்றிதழிலும் இந்து எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

யார் தான் இந்து?
அதை முதலில் மாற்றிவிட்டு இந்து சமய அறநிலையத்துறை பேரை மாற்றுவது குறித்து பேசலாம். அப்படியானால் திருமாவளவன் கிறிஸ்தவ அறநிலையத்துறை முஸ்லிம் அறநிலையத்துறை உள்ளிட்டவற்றை ஏற்படுத்துவதை ஆதரிக்க வேண்டும். இந்து என்கின்ற அடிப்படையில் எல்லோரும் ஒன்று கூடுவதும், ஒற்றுமையோடு இருப்பதையும் இவர்கள் எதிர்ப்பதன் காரணமாகவே இது போன்ற கருத்துக்களை முன் வைக்கின்றனர். பொன்னியின் செல்வன் படத்தை தொடர்ந்து ராஜராஜ சோழன் இந்து அல்ல வள்ளலார் இந்து அல்ல என்று தெரிவித்து வருகின்றனர். அப்படியானால் யார் தான் இந்து?

ஆர்எஸ்எஸ்
திட்டமிட்டு கிறிஸ்தவ இஸ்லாமியர்களும் திராவிட இயக்கங்களும் இந்துக்களை இந்துக்கள் அல்லாதோர் என்ற பட்டியலில் கொண்டு வருவதற்கு முயற்சி செய்கிறார்கள். அந்த முயற்சியை முறியடிப்போம் சனாதனம் காப்போம். ஆர் எஸ் எஸ் ஊர்வலத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் விரல் விட்டு எண்ணக் கூடியவர்களே ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வரும் இந்த ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு இந்த ஆண்டு வேண்டுமென்றே உள்நோக்கத்தோடு திமுக அரசு திருமாவளவனை தூண்டிவிட்டு, மத நல்லிணக்க பேரணிக்கு அனுமதி கேட்டு இரண்டிற்கும் அனுமதி மறுத்துள்ளனர்." என ஆவேசமாகப் பேசினார்.












Click it and Unblock the Notifications