அதிமுக மாவட்டச் செயலாளரை ரவுண்டு கட்டிய கட்சியினர்... திருச்சி பஞ்சாயத்து
திருச்சி: திருச்சி மாவட்டம் லால்குடி பகுதியில் நிவாரணப் பொருட்கள் வழங்கச் சென்ற அதிமுக புறநகர் மாவட்டச் செயலாளர் ரத்னவேலை, கட்சியினர் சிலர் ரவுண்டு கட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரும், அதிமுக திருச்சி புறநகர் மாவட்ட செயலாளருமான ரத்னவேல், லால்குடி ஒன்றியத்திற்குட்பட்ட வாளாடியில் நேற்று நிவாரணப் பொருட்கள் வழங்கச் சென்றார். அப்போது அங்கு வந்த கட்சியினர் சிலர், மாவட்டச் செயலாளராகிய நீங்கள் வரும் தகவலை எங்களுக்கு ஏன் தெரியப்படுத்தவில்லை. நாங்களும் அதிமுக காரர்கள் தானே எனக் கேட்டு ரத்னவேலை சுற்றி வளைத்து நின்று கொண்டு வாக்குவாதம் செய்தனர்.

கட்சியினர் ஆவேசமாக இருப்பதை பார்த்த ரத்னவேல் அவர்களை சமாளிக்க ஏதேதோ காரணங்களை கூறினார். ஆனால் அவர்கள் அதை கேட்டதாக தெரியவில்லை. இதனால் நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே புறப்பட்டுச் சென்ற அவர் இது எதிர்கோஷ்டியினரின் தூண்டுதல் என தலைமைக்கு புகார் அனுப்பியிருக்கிறார்.
திருச்சியை பொறுத்தவரை அதிமுகவில் 5-க்கும் மேற்பட்ட கோஷ்டிகள் உள்ளன. முன்னாள் எம்.பி. குமார், அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, ஆவின் கார்த்திகேயன், ரத்னவேல் என ஆளுக்கு ஒரு பிரிவாக பிரிந்து கோஷ்டிகளை வைத்திருக்கின்றனர். இதனால் திருச்சி மாவட்ட பஞ்சாயத்து இப்போது அடிக்கடி தலைமைக்கு செல்வதும், அதனை அமைச்சர் தங்கமணி விசாரித்து தீர்த்து வைப்பதும் தொடர் கதையாகி வருகிறது.
இதனிடையே தற்போதைய சூழலில் முன்னாள் எம்.பி.குமார் மட்டுமே ஓரளவு நல்ல முறையில் செயல்படுவதாக நினைக்கும் அதிமுக தலைமை, புறநகர் உள்ளிட்ட மற்ற பொறுப்புகளுக்கு புதிய பட்டியலை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.












Click it and Unblock the Notifications