ஆர்வமிகுதியில் அமைச்சர் கே.என்.நேரு ஆதரவாளர்கள்... பலமுறை கடிந்தும் கேட்காத உ.பி.க்கள்..!
திருச்சி: திமுக முதன்மைச் செயலாளரும், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சருமான கே.என்.நேருவின் ஆதரவாளர்கள் ஆர்வமிகுதியில் அவரை மையமாக வைத்து பிரம்மாண்டங்களை காட்டி வருகின்றனர்.
தன்னை வரவேற்கிறேன் என்ற பெயரில் மக்களின் கண்களை உறுத்தும் வகையில் தடபுடல் ஏற்பாடுகள் வேண்டாம் என பலமுறை தனது ஆதரவாளர்களிடம் நேரு கடிந்துகொண்டும் அதை கேட்டதாக தெரியவில்லை.
கே.என். நேருவின் படத்தோடு தங்களின் படத்தையும் பேனரிலும், போஸ்டரிலும் போட்டு ஏரியாவில் தங்களை பப்ளிசிட்டி செய்யவே பலரும் இது போன்ற காரியங்களில் ஈடுபடுகிறார்கள் என்பதையும் அனுமானிக்க முடிகிறது.

திருச்சி மாவட்டம்
கால் நூற்றாண்டு காலமாக திருச்சி மாவட்ட திமுகச் செயலாளராக இருந்த கே.என்.நேரு, கடந்த 2020-ம் ஆண்டு கட்சியின் முதன்மைச் செயலாளராக புரோமோஷன் பெற்றதால் மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டார். அண்ணா அறிவாலயத்தில் தனி அறை, கட்சியில் அதிகாரமிக்க பதவி என மகிழ்ச்சியடையாமல், மாவட்டச் செயலாளர் பதவி பறிபோகிறதே என நினைத்து கே.என்.நேரு சற்று வருத்தப்பட்டார்.

விசுவாசி
இதையடுத்து திருச்சி மாவட்டம் கட்சியின் நிர்வாக வசதிக்காக தெற்கு, வடக்கு, மத்திய என மூன்று மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது. அப்படி பிரிக்கப்பட்டதில் மத்திய மாவட்டத்துக்கு அதாவது திருச்சி மாநகரை உள்ளடக்கிய பகுதிக்கு தனது விசுவாசியான வைரமணியை பொறுப்பாளராக கொண்டு வந்தார். இன்று வைரமணி தான் திருச்சி மத்திய மாவட்ட திமுக செயலாளர் என்றாலும் கூட, முடிவெடுக்கும் அதிகாரம் நேருவிடம் தான் என அவரது ஆதரவாளர்களே கூறி வருகின்றனர்.

ஒரு லட்சம் ரூபாய்
இதனிடையே கே.என்.நேருவை வைத்து விழா நடத்தும் தனியார் அமைப்பினரும் கட்சியினருடன் போட்டி போடும் வகையில் அவருக்கு பிரம்மாண்ட வரவேற்பு கொடுக்கத் தொடங்கியுள்ளனர். இப்படித்தான் கடந்த வாரம் ஒரு லட்சம் ரூபாய் செலவில் ஒரு டன் எடையுள்ள ரோஜாபூ மாலையை நேருவுக்கு சூட்டுவதற்காக தனியார் அமைப்பு ஒன்று தயாரித்து வத்திருந்தது. 7 அடி உயரமும் 2 அடி அகலமும் கொண்ட அந்த ரோஜாப்பூ மாலை கிரேன் மூலம் நேருவின் கழுத்தில் சூட திட்டமிடப்பட்டது.

விழா அரங்கம்
அந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்த நேரு, அந்த பிரம்மாண்ட மாலையை பார்த்தவுடன் படு டென்ஷனாகிவிட்டார். ''ஏன்யா இப்படி பண்றீங்க, சி.எம். எளிமையா இருக்கச் சொல்லியிருக்காரு, அவரே எளிமையை பின்பற்றும் போது நாம் இப்படி செய்தா அது நல்லாவா இருக்கும்'' என பேசிக்கொண்டே விழா அரங்கத்துக்குள் சென்றுவிட்டார். கடைசி வரை அந்த மாலையை நேரு சூட்டிக்கொள்ளவே இல்லை.

கோபம்
இது ஒரு புறம் என்றால் மற்றொரு புறம் கட்சியினர் ஆர்வக்கோளாறில் செய்யும் அலப்பறைகளால் நேருவின் முகம் எள்ளும், கொள்ளுமாக வெடிக்கிறது. இதனிடையே நேருவை மட்டும் மையப்படுத்தி விளம்பர அரசியல் செய்து வந்த பலர் இப்போது அவரது மகன் அருண் நேருவின் படத்தை வைத்தும் விளம்பர அரசியலை தொடர்கின்றனர்.












Click it and Unblock the Notifications