உள்ளாட்சி தேர்தல் எப்போது?.. அமைச்சர் கே என் நேரு சொன்ன பரபரப்பு தகவல்!
திருச்சி: உள்ளாட்சி தேர்தல் தேதியை ஓரிரு நாட்களில் முதல்வர் அறிவிப்பார் என அமைச்சர் கே என் நேரு தெரிவித்துள்ளார்.
திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட அண்ணாநகர், தில்லை நகர், புத்தூர், உறையூர், சிந்தாமணி, மரக்கடை, மலைக்கோட்டை ஆகிய பகுதிகளில் குடிநீர் அபிவிருத்தி திட்டத்தின்கீழ் ரூ 54.27 கோடி மதிப்பிலான மறுசீரமைப்பு பணிகளுக்கு நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே என் நேரு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
இதைத் தொடர்ந்து அமைச்சர் நேரு செய்தியாளர்களிடம் கூறுகையில், இன்று அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்துள்ள குடிநீர் அபிவிருத்தி திட்டப் பணிகள் இன்னும் ஓராண்டுக்குள் நிறைவடைந்து பொதுமக்களின் பயன்பாட்டிற்காக நடைமுறைப்படுத்தப்படும்.

புதிய குழாய்கள்
இதில் 103.45 கி.மீ. தூரத்திற்கு பழைய குழாய்கள் மாற்றப்பட்டு புதிய குழாய்கள் பொருத்தப்படுகிறது. இதன் மூலம் 43,114 குடிநீர் இணைப்புகள் வழங்கப்படும். இதற்காக தில்லை நகர், உறையூர், அண்ணாநகர், மரக்கடை ஆகிய 4 இடங்களில் மேல்நிலை நீர்த் தேக்க தொட்டிகள் அமைக்கப்படவுள்ளன. அதே போல் சிந்தாமணி, மலைக்கோட்டை பகுதிகளில் சம்ப் போன்ற தொட்டிகள் அமைக்கப்படும்.

திருச்சி மாநகராட்சி பகுதி
மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டம் தமிழகத்தில் திருச்சி மாநகராட்சி பகுதிகளில் இன்னும் நடைமுறைப்படுத்தப்படவல்லை. விரைவில் அந்த திட்டம் அமல்படுத்தப்படும். இதற்காக மத்திய, மாநில அரசுகளின் மாநகராட்சி பகுதி திட்ட பங்களிப்பு குறித்து விரிவான அறிக்கை தயார் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

தேர்தல் அறிக்கை
தேர்தல் அறிக்கையில் உள்ளபடி திருச்சியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க முதல்வர் ஆணையிட்டுள்ளார். அதற்கான அறிவிப்பு பட்ஜெட்டிலும் வெளியிடப்பட்டது. அங்கு வணிக வளாகமும் கட்டப்படவுள்ளது. அங்கு சில்லறை மற்றும் மொத்த வியாபாரமும் நடைபெறும். திருச்சியில் மார்க்கெட்டுகளை பொருத்தவரையில் தற்போது நடைமுறையில் இருக்கும் மார்க்கெட்டுகள் அதே இடங்களில் தொடர்ந்து செயல்படும்.

மாநகராட்சி விரிவாக்கம்
மாநகராட்சி விரிவாக்கத்தின்போது அதிக வருவாய் தரும் பஞ்சாயத்துகள் மாநகராட்சியுடன் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அந்த அடிப்படையில் பேரூராட்சிகள் இணைக்கப்பட்டால் அங்கு தேர்தல் நடத்தப்படும். ஊராட்சி பகுதிகளில் தேர்தல் நடத்தப்படாது. ஊராட்சி மன்றத் தலைவர்கள், கவுன்சிலர்கள் அனைவரும் பதவிக்காலம் முடியும் வரை அதே பதவியில் இருப்பார்கள். ஆனால் மாநகராட்சி கூட்டங்களில் அவர்கள் பங்கேற்க முடியாது.

அட்டவணை தயாரிக்க
மாநகராட்சி தேர்தல் தேதி குறித்த அட்டவணை தயாரிக்க அதிகாரிகளுக்கு முதலமைச்சர் ஆணையிட்டு உள்ளார். அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. எந்த தேதியில் தேர்தலை நடத்தலாம் என்பது குறித்து துறை செயலாளர்கள், அதிகாரிகள் அறிக்கை தயாரித்து முதல்வரிடம் சமர்ப்பிப்பார்கள். அதன்படி இன்னும் ஓரிரு நாட்களில் உள்ளாட்சி தேர்தல் தேதியை முதல்வர் அறிவிப்பார் என நேரு தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications